சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை!
ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்பரேஷன் அதிகாரிகளின் இப்போதைய முக்கியப் பணி இதுவாகத்தான் இருக்கிறது.
ஹைதராபாத் நகரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில்,
14 ஆயிரம் பிச்சைக்காரர்கள் ஹைதரபாத்தில் உள்ளனர் என்றும், அவர்களில் 98% பேர் போலியானவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களின் வருடாந்திர ஒட்டுமொத்த வருமானம் மட்டும் ரூ.24கோடியைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.
குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் ஒவ்வொரு நாளும் ரூ. 2 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத் நகரை பிச்சைக்காரர்களே இல்லாத நகரமாக மாற்றம் செய்யும் முயற்சியாக, ஹைதரபாத் நகரில் அதிகாரிகள் ஒரு மறுவாழ்வு மையத்தை தொடங்கியிருக்கிறார்கள். அதில், உண்மையாகவே வாழ வழியின்றித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் தங்கள் குறித்த விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். நகரின் என்.ஜி.ஓ.க்கள் மூலம் அவர்களுக்கான மறு வாழ்வு ஏற்பாடு செய்யப் படுகிறது. குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். இளைஞர்களுக்கு மெக்கானிக் உள்ளிட்ட தொழில்களுக்கு வழிகாட்டப்படுகிறது. முதியவர்கள் ஹைதராபாத்தில் உள்ள முதியோர் மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பப் படுவார்கள் என்கிறார்கள்.
எத்தனையோ பிரச்னைகளுக்காக பிச்சை எடுக்கிறார்கள். ஆனால், அவர்களில் பரிதாபப் பட வேண்டியவர்கள் மிகவும் குறைவு! அடுத்த முறை பிச்சை போடும் போது, நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிச்சை இடும் நபர் உங்களை விட பணக்காரராக இருப்பார் என்பதை!


