பொறுக்கிப் பயலின் தலை முடியைப் பற்றி இழுத்து வந்து செருப்பால் அடித்தார் பெண் ஒருவர். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியின் சாரம் இதுதான்!
வீட்டிலிருந்து வெளியில் வந்தது முதல் திரும்பி வரும்வரை பின் தொடர்ந்து தொல்லை தந்தான் இளைஞன் ஒருவன். அவனுக்கு ஒரு திருமணமான பெண் தகுந்த ‘மரியாதை’ செய்து, பின்னர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தினமும் தொல்லை கொடுத்து வந்த இளைஞனை போட்டுத் தாக்கினார் ஒரு வீரப்பெண். தினமும் தொடர்ந்து வேதனைக்கு உள்ளாக்கியதால் எரிச்சலடைந்து அவனைக் கும்மியெடுத்தார். அந்த ஊர்சுத்திப் பயலை நையப்புடைத்தார்.
அவளோடு உள்ளூர் மக்களும் கூட்டணி சேரவே ஈவ்டீசிங் செய்தவனின் உடல் நொந்து நூல் ஆகியது . பெண்கள் திருப்பித் தாக்கினால், போக்கிரிகள் எவ்வாறு வாலை சுருட்டிக் கொள்வார்கள் என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம் ஆந்திரம், கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்தது.
விஜயவாடா அருகிலுள்ள கொண்டபல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணை சாய் சைதன்யா என்ற இளைஞன் சில நாட்களாக துன்புறுத்தி வந்தான். அந்தப் பெண் வீட்டிலிருந்து வெளியில் வருவதற்காக காத்திருப்பான். வழியெங்கும் பின் தொடர்வான். இதனால் அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே நரகம் ஆனது!
டிச.1 பள்ளியில் படிக்கும் தன் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து விட்டு திரும்பி வரும்போது ‘ஆறுபம்புல ‘ சென்டர் அருகில் தடுத்து நிறுத்தி, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டான்.
அது வரை பல முறை அவனுக்கு புத்தி கூறி சோர்ந்து போன அந்தப் பெண் பொறுமை இழந்து பத்திரகாளி அவதாரம் எடுத்தார். எதிர்த்து நின்றார். தலைமுடியைப் பிடித்து தரதரவென சாலைப் பக்கமாக இழுத்து வந்து செருப்பை கழற்றி பளார் பளார் என்று அறை விட்டார்.
“எத்தனை தடவைடா சொல்வது?” என்று அடக்கமுடியாத கோபத்தால் வெளுத்து வாங்கினார். உள்ளூர்வாசிகளும் உடன் சேர்ந்து இளைஞனை புரட்டி எடுத்தனர். சாயியை அங்கேயே மடக்கிப் போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இப்ரஹிம்பட்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாயி சைதன்யாவை கைது செய்தனர்!