
சென்னை:
‘இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திர வெப்பம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அனல் காற்று அதிபயங்கரமாக வீசியது. 24 இடங்களில் அனல் அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், அனல் அலை தணிந்து, பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மே 24 இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பம் அதிக பட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



