ஆற்றில் மூழ்கி டாக்டருடைய மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பத்மசரண்(வயது 12). கச்சிராயப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சசிகுமார் அவரது மகனை பொட்டியம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
அங்கு பத்மசரண் மற்றும், அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனது உறவினர் பெண் காயத்ரி(14) என்ற பெண்ணுடன் துணி துவைப்பதற்காக பொட்டியம் ஆற்றுக்கு சென்றுள்ளான். அப்போது அங்கு காயத்ரி துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய பத்மசரண் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்தான்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காயத்ரி அவனை காப்பாற்ற ஆற்றில் குதித்தபோது அவளும் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிப்போன இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கச்சிராயப்பாளையம் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே பத்மசரணும், காயத்ரியும் பரிதாபமாக இறந்து விட்டனர்.