நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட கல்ஹல்லா காப்பு காட்டுக்குள் வழக்கம்போல் கால்நடைகளை மேய்க்கவும், விறகு சேகரிக்கவும் குரும்பர்பாடியைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.
வனத்தில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென பயங்கர சத்ததுடன் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்ட மற்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது பெண் புலி ஒன்று அந்தப் பெண்ணை அடித்து புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதைக்கண்டு பதறியவர்கள், கூச்சலிட்டுள்ளனர்.
சுமார் 200 மீட்டர் தூரம் புதருக்குள் பெண்ணை இழுத்துச் சென்ற புலி மக்களின் கூச்சலால் பெண்ணை விட்டுவிட்டு ஓடியுள்ளது. இவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்தப்பெண் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.
இந்தத் துயர நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர், “சுமார் 12 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாதன், அவரது மனைவி உள்ளிட்ட சிலர் காட்டுக்குள் இருந்துள்ளனர்.
மாதன் கண் முன்னாலேயே மனைவி கெளரியைத் தாக்கிய புலி, கொன்று இழுத்துச் சென்றுள்ளது.உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.
நீலகிரியில் கடந்த 2014 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புலி – மனித எதிர்க்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்தது. இடையில் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறாத நிலையில், தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது