
பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியபோது பகுதியில் ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் சுமார் இரண்டு மணி நேரமாக அலைக்கழித்ததாக பெற்றோர் புகார். வயிற்று வலியால் துடித்த சிறுவனுக்கு சுமார் இரண்டு மணிநேரம் கழித்து சிகிச்சை அளிக்கப்பட்டது கூறுகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் ஆறு வயது மதிக்கத்தக்க கோகுலகிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கி விட்டார்.
வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளார் இதையடுத்து அவரது தந்தை அருகிலுள்ள பெரிய போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி உள்ளார்கள்.
உடனடியாக அந்த சிறுவனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார் ஆனால் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் 2 மணி நேரம் வரை அலைக்கழிக்கப்பட்டு அதன் பிறகு தண்ணீர் அருந்துங்கள் சரியாகிவிடும் என கூறி சிகிச்சை அளிக்காமல் அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் அவர்களை தொடர்பு கொண்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கவில்லை என தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சார் ஆட்சியர் வைத்தியநாதன் அவர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரை தொடர்புகொண்டு சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டதை அடுத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.