சென்னை : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கும் கால அளவு என்றும், அந்த 2 மணி நேரத்தை எப்போது என்பதை அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மக்கள் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம்.
உள்ளாட்சி அமைப்புக்களின் அனுமதியுடன் பொது மக்கள் ஒன்று கூடி திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிக்க முயற்சி செய்யலாம்.
அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கும் சர வெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களின் அருகில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்… என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




