தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள் ளதாவது :-
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
தமிழக கலாச்சாரத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டுப் போட்டி. பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.
விரைவில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு, மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் தட்பவெப்ப மாற்றங்கள் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் நேரடியாக அறிவுறுத்த வேண்டும்.
வரும் 2016 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வழிவகைக் காணப்பட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் அவர்களது பிரதிநிதியாக நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் .


