மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்
உலகம் கொண்டாடுகிறது…
பெண் என்பவள் பிரம்மாவின் மறு அவதாரம்.
பெண் சிருஷ்டி செய்பவள்.
பூமிக்கு மட்டுமல்ல ஈர்ப்பு சக்தி. பெண்ணிற்கும் உண்டு. அகண்டமான ஆகர்ஷண சக்தியை பூமாதேவிக்குச் சமமாக தன்னில் கொண்டவள் பெண். அவளிடம் தலைவணங்கி, தலைகுனிந்து நின்ற ஆண்களை அனைத்து யுகங்களும் கண்டுள்ளன.
பிரகதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை உள்ளது. பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தன் கையால் மனைவிக்கு அன்னம் சமைத்து அதில் வெண்ணையும் நல்லெண்ணையும் கலந்து கொடுத்தானாம் கணவன். பெண் சிசுவிற்கு சமூகத்தில் எத்தனை வரவேற்பு இருந்தது என்பதை இந்தக் கதை மூலம் அறிய முடிகிறது.
“Wife is the sacred soil where husband can reborn” என்று உண்மையை கணவர்கள் அந்நாளில் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது.
பெண் என்பவள் புனித மண்!
பெண் என்பவள் மகாசக்தி!
படைக்கும் சக்தி பிரம்மனுக்கு மட்டுமா? பெண்ணிற்கில்லை?
புவியீர்ப்பு பூமிக்கு மட்டுமா? அணங்கிற்கில்லை?
அவளா மாயை? அவளிடம் ஈர்க்கப்பட்டு தலைவணங்கி… தலைகுனிந்த அரசர்களும் ஆண்டிகளும் கணக்குண்டா? கேளும்! சரித்திரம் கூறும்.
பெண்ணை அபலை என்று பிரித்துப் பேசி
பழித்துக் கூறும் பேதமையை என்ன சொல்ல?
பெண் எனும் புனித மண்ணில்
கணவன் மீண்டும் மகனாய்ப் பிறக்கிறான்
“ஆத்மாவை புத்திர நாமாசி சஞ்சீவ ஸரதஸ் சதம்!”
கணவனைப் பெற்ற அன்னையும் அவளே ஆகிறாள்.
பின்,
மாமியார் யார்? மருமகள் யார்?
பெண்ணென்னும் மகாசக்தியே
உன்னைப் போற்றி வணங்குகிறேன்!
- ராஜி ரகுநாதன் ஹைதராபாத்-62