கோவை:
பொள்ளாச்சி அருகே வளந்தாயமரம் செக்போஸ்ட் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழ்நாடு மாணவர் மன்றம், பெ.தி.க., சார்பில், கேரள எல்லை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை வகித்து, மூன்று மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கின்றன.
விவசாயம், குடிநீர் உட்பட முக்கிய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இயற்கையாக கிடைக்கும் நீரினை யாரும் தடுத்து நிறுத்தி உரிமை கொண்டாடக் கூடாது. எனவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். பெ.தி.க., அமைப்பாளர் நாகராஜ், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் பிரபு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வளந்தாயமரம் சோதனைச் சாவடியிலிருந்து, நடைப்பயணமாக கேரள எல்லையை முற்றுகையிடச் சென்றனர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
தமிழ்நாடு மாணவர் மன்றம் அமைப்பினர், ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற, 85 பெண்கள் உட்பட 515 பேரை போலீசார் கைது செய்தனர்.