
சென்னை:
ஆந்திரத்தில்ப மீனவர்களால் தமிழக மீனவர்கள் 180 பேர் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 140 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 13 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திரக்கடல் பகுதியான மண்ணூர் பூண்டி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகுகளில் வந்த ஆந்திர மீனவர்கள் அவர்களை திடீரென சுற்றி வளைத்தனர். பின்னர், காசிமேடு மீனவர்கள் 140 பேரையும் 13 விசைப்படகுகளுடன் சிறை பிடித்து சென்றனர்.
நேற்று மாலை பென்னார்பாளையம் அருகே காசி மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களையும் படகுகளுடன் ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றனர். மொத்தம் இவ்வாறு 180 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காசி மேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மீனவர்களை மீட்பதற்கான முயற்சியில் மீனவர் சங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆந்திராவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்



