சென்னை:
அதிமுக.,வின் இரு அணிகளும் இணையும் என்று தாம் நம்புவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு மந்தை மேம்பாலத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் இரு அணிகள் இணைவது குறித்து என்ன திட்டம் உள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “அதிமுக., இரு அணிகள் இணைப்பு நடைபெறும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
மேலும், “நீட் நுழைவுத் தேர்வில் நாங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மாணவர் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை கவனமாக எடுத்துக் கொண்டு எந்தவித சட்ட சிக்கலும் வராத அளவுக்கு இதில் முடிவுகள் எடுக்கப் படும். இந்த விவகாரத்தில் மாநில அரசைப் பொறுத்தவரை தமிழக மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. அதற்காக நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
அண்மையில் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்கு தில்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் இரு அணிகளும் இணையவேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு பாஜக., சார்பில் எடுத்துரைத்தாகக் கூறப்படுகிறது. மோடியும் இதனை அவர்களிடம் வற்புறுத்தியதாகவும் சொல்லப் படுகிறது. எனவே இது குறித்த பேச்சு தமிழகத்தில் எழுவது வாடிக்கையாகிவிட்டது.