சென்னை:
திமுக.,வும், அதிமுக.,வும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன என்று குற்றம் சாட்டிய தேமுதிக., தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அதைத் தருவது தேமுதிக.,தான் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை, திருப்பரங்குன்றம் ஒன்றிய தேமுதிக., செயலாளர் மலைச்சாமி இல்ல திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். அந்தத் திருமண விழாவில் அவர் பேசியபோது, “தமிழகத்தில் திமுக.,வும், அதிமுக.,வும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இதற்கான மாற்றம் விரைவில் வரும். அதனைத் தருவது தேமுதிக., ஆட்சி தான். தேர்தல் நேரத்தில் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற வேண்டாம். 5 வருடம்தான் மக்களை திமுக.,, அதிமுக.,வால் ஏமாற்ற முடியும். ஒருநாள் நிச்சயம் தேர்தலின் போது கையில் மை வைத்து மக்கள் அவர்களை ஏமாற்றுவார்கள். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்சைப் பார்த்து சிரித்தாலே ரூ.10 ஆயிரம் கொடுப்பார்கள். முதலில் கிணற்றை கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு ரூ.10 ஆயிரம் கொடுக்கட்டும்” என்று பேசினார்.
இந்த விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஜெ.தீபா, ஜெயலலிதா வீட்டை தர மறுக்கிறார். எடப்பாடி ஆட்சியை விட மறுக்கிறார். தண்ணீர் எந்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ளாது. அதுபோல் கேப்டனும் அவர் தொண்டர்களும் கொள்கையில் இருந்து ஒருபோதும் மாற மாட்டார்கள். தேமுதிக., வளர்ச்சியைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. தேமுதிக., வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக.,வும் திமுக.,வும் லஞ்சத்தைப் பெற்று அதை செலவு செய்கின்றன. நாமோ எதிர்க்கட்சியாக இருக்கும் போதே செலவு செய்கிறோம். தமிழகத்தில் வெகு விரைவில் மாற்றம் நடக்கும். விஜயகாந்த் ஆட்சி அமைப்பார்” என்று உறுதியுடன் பேசினார்.