சேலம் அருகே கோயில் விழாவில் இரு சமுதாயத்தினரிடம் பிரச்னை ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த கும்பாபிஷேகம் நின்றுபோனது. மேலும், 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு சேலம், மார்ச் 3: சேலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் மோதல் அபாயத்தைத் தடுக்கும் விதமாக, 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் வேடுகாத்தாம்பட்டியை அடுத்த திருமலைகிரி தோப்புக்காட்டில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சைலாம்பிகை சமேத சைலகிரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இதையடுத்து, கோயிலைப் புனரமைத்து, புதன்கிழமை இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மற்றொரு சமுதாயத்தினர் வரக்கூடாது எனக் கோயில் நிர்வாகத்தினர் கூறியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக திங்கள்கிழமை ஒரு சமுதாயத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், இரு தரப்பினரையும் அழைத்து, வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, கோயில் கும்பாபிஷேக விழாவில் மோதல் அபாயத்தைத் தடுக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் பரிந்துரையின்பேரில், வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.எச்.ஷேக் முகைதீன் கோயிலைச் சுற்றியுள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள திருமலைகிரி, வேடுகாத்தம்பட்டி, ஆண்டிபட்டி, பனங்காடு, சிவதாபுரம், கந்தம்பட்டி, சேலத்தாம்பட்டி, தளவாய்ப்பட்டி, கொல்லப்பட்டி, சோமன்திட்டு, பெருமாம்பட்டி, கணவாய்க்காடு, கொத்தனூர், கீரப்பாப்பாம்பட்டி, அரியாக்கவுண்டம்பட்டி, சித்தனூர், நாய்க்கன்பட்டி, முருங்கப்பட்டி, சூரமங்கலம், காட்டூர், நல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இந்த உத்தரவையடுத்து மார்ச் 4-ஆம் தேதி நடைபெறவிருந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெறாது என கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோயிலுக்குப் பூட்டுப் போட்டுத் தடை உத்தரவு நகலை கோயிலின் முன் ஒட்டினர். இதையடுத்து, இந்தக் கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதி கோரி, திருமலைகிரி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு சித்தர் கோயில் மலையில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியபோது, திருமலைகிரியில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேகத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்காக கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து வருகிறோம். இந்த நிலையில், மற்றொரு சமுதாயத்தினர் செய்த பிரச்னை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதால் தெய்வநிந்தனை ஏற்படும் எனக் கருதுகிறோம். எனவே, நிறுத்தப்பட்ட கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் சித்தர் கோயில் மலையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளோம். கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி அளிக்கும் வரை இங்கேயே தங்கி இருப்போம். இதைத்தொடர்ந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளைக் கிழித்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
சேலம் அருகே கோயில் விழாவில் இரு சமுதாயத்தினரிடம் பிரச்னை: நின்று போன குடமுழுக்கு
Popular Categories


