தருமபுரி அருகே காவல்நிலையம் முன்பாக இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையம் முன்பாக இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். புகாரை காவல்துறையினர் பெறாததால் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
ஏரியூரை அடுத்த மஞ்சப்பட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏரியூர் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாக உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். அக்கம் பக்கத்தினர் மணலை வீசி காப்பாற்ற முயன்ற போதும் பலனளிக்காமல் ஆசைத்தம்பி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.