சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீட்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா, திட்டக்குடி கோயில் நிலத்தை, அதிமுக., எம்.பி., அருண்மொழித்தேவன் ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அருண்மொழித் தேவன் குறித்து ராஜா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், ஹெச்.ராஜா மீது இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்குதல், சாதி-இன-மத கலவரத்தைத் தூண்டுதல், பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்பி, விரோதத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




