சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், சபரிமலை தேவசம் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது.
எனவே, இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, தற்போதைய உத்தரவுக்கு இடைக்காலத் தடையும், நல்ல தீர்ப்பும் வரும் என நான் நம்புகிறேன், அதையே விரும்புகிறேன்.. என்று கூறினார் பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்.
பொற்றாமரை இலக்கியக் கூட்டத்துக்காக திருவாரூருக்கு வந்த இல.கணேசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
நீதிமன்றம் விதிமுறையைத் தளர்த்தியதாகக் கூறி, திட்டமிட்டே ஒரு சிலர் விளம்பரத்திற்காக வேண்டுமானால் கோவிலுக்குச் செல்ல முயற்சிக்கலாம். ஆனால் திரளாக மகளிர் சபரிமலைக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். நம் நாட்டு மக்கள் சட்டத்தை விடவும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்று கூறினார்.
மேலும், தேவஸம் போர்டு மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப் பட்டு, நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகக் கூறினார்.



