நெல்லை: தமிழக – கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஆரியங்காவு வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ மளமளவென அடர்ந்த விலையுயர்ந்த மரங்கள் நிரம்ப பெற்ற தேக்கு மரங்கள் உள்ள வனப்பகுதியில் வேகமாக பரவியது. வேகமாக பரவிய காட்டும் தீ தொடர்ந்து தரைப்பகுதியில் இருந்து மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் கொழுந்து விட்டு, வேகமாக பரவி வருகிறது.
தற்போது வரை காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின.
தற்போது தீ பற்றியுள்ள வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள், சிறுத்தை, காட்டுப்பன்றி,மிளா,உடும்பு உள்ளிட்ட பல்வேறு விதமான அரிய வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன.
காட்டுத் தீ காரணமாக வேறு இடங்களுக்கு விலங்குகள் சென்று இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
மேலும், அங்குள்ள விலங்கினங்கள், ஊர்வன வகைகள் தமிழக வனப்பகுதிக்குள் வரும் அபாயமும் உருவாகியுள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில் சில சமூக விரோதிகள் மரங்களை வெட்டி கடத்துவதற்காக வனத்தை தீயிட்டு எரிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கேரள வனப்பகுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை தீ பற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.