
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு வழி செல்லும் முன்பதிவு துரித ரயில் பெட்டிகளில் அமர்ந்து மிரட்டும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.தென்னக ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் வடமாநிலத்தவர்கள் பரவி விட்டனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்தை கடந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓமலூர் அருகே கருப்பூர், தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென அபாய சங்கிலியை இழுத்த 3 பெண்கள், ரெயிலில் இருந்து இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
விசாரணையில், முன்பதிவு செய்த இருக்கையை ஆக்கிரமித்து சிலர் மிரட்டியதாக அப்பெண்கள் புகார் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய ரயில்வே அதிகாரிகள், இருக்கை ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து, சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து மிரட்டும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில், ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.




