கோவை:
தன்னிச்சையாக இயங்கக் கூடிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் கார்த்திக் சிதம்பரம்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் தன் நிலையை தாண்டி சிந்திக்கக் கூடாது. தன் எல்லைக்குள் சிந்தனை, எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரிய அளவில் வாக்குகளை வாங்கவில்லை. கன்னியாகுமரி, சிவகங்கையில் தான் லட்சம் வாக்குகளையே தாண்டினோம். எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என எண்ணுவது பொருத்தமாக இருக்காது. ஆட்சியில் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். தற்போது உள்ளதைவிட கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்று, நிச்சயம் தொழிலுக்காக, தொழில் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. இரண்டும் கூட்டணி அமைத்ததில்லை. காங்கிரஸ், பாஜக., இரண்டும் அணி சேர்ந்ததில்லை. இந்தக் கட்சிகளைத் தவிர எல்லாக் கட்சியும் எல்லோருடனும் கூட்டணி அமைத்துள்ளார்கள். கொள்கை ரீதியிலான கூட்டணி என்பதெல்லாம் இங்கு இல்லை. எல்லோருடைய கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கும். அதேபோல் எங்கள் கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் மட்டும் கோஷ்டி பூசல் இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. எல்லா கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதனால் வெற்றி, தோல்வி பாதிக்காது. எந்தக் கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியிலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிக்கு நல்லதுதான். போட்டி, கூட்டம் எல்லாம் நடக்கும். இது கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணி மட்டும்தான். கொள்கை என எதுவும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பெரிய கூட்டணி வெற்றி பெறும் அவ்வளவுதான். காங்கிரஸ் துடிப்பான கட்சியாக இருக்கவேண்டும். அதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் தலைவராக இருக்க வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படுபவர் தேவை இல்லை. மூத்த தலைவர்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தன்னிச்சையாக இயங்கும் தலைவர்கள் காங்கிரசுக்கு தேவை இல்லை… என்று கூறினார்.


