தை மாதம் முதல் சனிக்கிழமை விழா கரும்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மருதூர் அனுமந்தராயசாமி!
காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும்.
இன்று தை மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து கரும்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
தன்னைத் தேடி வணங்கிட வரும் விவசாயிகள் மற்றும் பக்தர்கள் வாழ்வு இனிக்க ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு இன்று கரும்பு அலங்காரம் செய்யப்பட்டதாக பக்தர்கள் கூறினார்கள்.
முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு,முத்துக்கல்லூர் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனை நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம், ஊட்டி,குன்னூர்,கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம்,காரமடை,தேக்கம்பட்டி,புஜங்னூர்,தாயனூர்,வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
செய்தி: எஸ்.வி.பி. சங்கத்தமிழன்