அது நாகர்கோயிலில் நடைபெற்ற இலக்கிய கூட்டம். என் நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு பேசத்தெரியாததால் வழக்கம்போல் பார்வையாளனாக கலந்துக் கொண்டேன். அங்கு பல விவாதங்கள் நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகள் அரங்கேறின. அப்போது ஒரு எழுத்தாளர் சொன்ன தகவல் இன்னும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. அது பாரதியார் பற்றிய தகவல். நாம் இத்தனை காலம் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்த ஒரு நம்பிக்கையின் மீது வீழ்ந்த அடி.
எழுத்தாளரும் கவிஞருமான அவர் சிங்கப்பூர் தமிழர்கள் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஓட்டலில் இவரைப் போலவே விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மற்றொருவரை சந்தித்திருக்கிறார். அவரிடம் நமது எழுத்தாளர் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசியிருக்கிறார். அதற்கு அந்த பெரியவர், “எனக்கும் தமிழ் தெரியும். உங்களுக்கும் தமிழ் தெரியும். அப்படிருந்தும் ஏன் இடையிடையே ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசுங்களேன். நன்றாக இருக்கும்.” என்று கூறியிருக்கிறார். இதனால் இயல்பாகவே அவர் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. தினமும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
மூன்று நாட்கள் அந்த ஓட்டலில் இருந்ததில் அவரிடம் மிக நெருங்கிப் பழகிவிட்டார் நமது எழுத்தாளர். அந்த நெருக்கத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அந்த நபர் சுப்ரமணிய பாரதியின் தம்பி மகன். பாரதியைப் பற்றி பல அறியப்படாத தகவல்களை அவர் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே நான் சொல்லப் போவதாக சொன்ன தகவலும்.
பாரதியார் கண்ணம்மா என்ற பெயரில் கண்ணனை பற்றி பாடியதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண் இருந்ததாகவும். அந்தப் பெண்ணைத்தான் பாரதியார் பாடியதாகவும், அந்தப் பெண் ஒரு விதவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பாரதியின் வீட்டுக்கு எதிரேதான் அந்தப் பெண் இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஐந்து அண்ணன்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பாரதியாரை மிரட்டியிருக்கிறார்கள். கண்ணம்மா என்ற பெயரில் பாடல் எழுதக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார்கள். பாரதிதான் அஞ்சாநெஞ்சனாயிற்றே இந்த மிரட்டலை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கண்ணம்மா பெயரில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
பொறுமையின் எல்லையை கடந்த சகோதரர்கள் ஒரு கட்டத்தில் பாரதியாரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் இதற்கு முதல் நாள்தான் கோயில் யானை வேறு பாரதியாரை கீழே தள்ளிவிட்டிருக்கிறது. பாரதிக்கு பலத்த காயம்தான், யானை தள்ளியதால் அல்ல, சகோதரர்கள் அடித்ததால். ஒருசில நாட்களில் பாரதியார் இறந்து விடுகிறார். அவர் மரணத்துக்கு காரணம் யானை அல்ல. என்று மீண்டும் அழுத்தமாக அவர் கூறியதாக எழுத்தாளர் கூறினார். இதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் பாரதி சார்ந்த குடும்பத்தினரே கூறும் போது அதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை.
அப்போதிருந்த எனக்கு இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் இதை விளக்கினால் நன்றாக இருக்கும். விளக்குவார்களா..!!!




