பிரதமர் மோடியை அன்பால் மட்டுமே வெல்வோம் என்று ராகுல் காந்தி உறுதிபடக் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இனி சொல்வதற்கு எதுவுமில்லை என்ற சூழலில், காங்கிரஸின் காந்திக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டுள்ளது.
தன்னையோ, தனது குடும்பத்தையோ, யார் விமர்சித்தாலும், அவர்களை அன்பால் வெல்வதற்கே, தாம் ஆசைப்படுவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். அதுவும் கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்!
மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைன் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் பேசியதாவது…
எனது தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி, தாத்தா ஜவஹர்லால் நேரு ஆகியோரை, பிரதமர் விமர்சித்தாலும், ஒருபோதும், மோடியையோ, அவரது தாய், தந்தையையோ, அவமதிக்க மாட்டேன் என பேசினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை அன்பால் வெல்வோம், கட்டியணைப்போம் என்பதில் எப்போதும், உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல் நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்னும் இரு தினங்களில் 7ம் கட்ட பிரசாரமும் ஓயப் போகிறது. இந்நிலையில், கடைசிக் கட்டப் பிரசாரத்தில் ராகுல் பேசியிருப்பது இது அரசியல் என்று பலரையும் கூறவைத்துள்ளது.
பல்வேறு பொய்களை வாய்க்கு வந்தபடி மேடைகளிலும் ஊடகங்களிலும் பேசி, புயல் வந்து அடித்து ஓய்ந்ததைப் போல் இப்போது, ராகுல் கூறியிருப்பதைக் கண்டு பலரும் நகைக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தால் குட்டுப் பட்டு, இப்போது ஞானோதயம் வந்திருப்பதாக கருத்துகள் களை கட்டுகின்றன.