Home Blog Page 5433

வைணவ குருபரம்பரை

வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது.
“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்
நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம்பராம்”
‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’ என்பது இந்தச் செய்யுளின் பொருள்.

இது ராமனுஜரின் சீடரான கூரத்தாழ்வார் அருளிய செய்யுள். வைஷ்ணவ ஆசார்ய பரம்பரையை இது சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

லக்ஷ்மிநாதனான நாராயணனிடம் துவங்குகிறது இந்தப் பெருமை மிக்க பரம்பரை. நாராயணின் திருவடிகளை அடைவதே ஒரு வைஷ்ணவனின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய அந்த வைஷ்ணவருக்கு வழிகாட்டும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் இடத்திலும் நாராயணனே இருக்கிறார்!

வைணவத்தில் ஒரு கோட்பாடு உண்டு. ஒரு மனிதன் அடைய வேண்டிய இடமும் (உபேயம்) அடைய வேண்டிய வழியும் (உபாயம்) ஒன்றே!
இறைவனை அடைவது நோக்கம் என்றால், அதற்கு வழி இறைவனை (ஆச்சார்யர்களின் வழிகாட்டலின்படி) வணங்குவதுதான் . எனவே தன்னை அடைய நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் ஆச்சார்யராக மகாலக்ஷ்மியோடு இணைந்திருக்கும் மகாவிஷ்ணுவே விளங்குவது பொருத்தம்தானே!

மகாவிஷ்ணு எப்போதும் மகாலக்ஷ்மியோடு இணைந்தே இருப்பதாகக் கொள்வது வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறார் என்பதால், மகாவிஷ்ணு அல்லது நாராயணன் என்று சொன்னாலும் அது மகாலக்ஷ்மியோடு கூடியிருக்கும் பெருமாளைத்தான் குறிக்கும்.’ ‘லக்ஷ்மிநாத’ என்று கூரத்தாழ்வார் குறிப்பிட்டிருப்பதன் முக்கியத்துவமும் இதுதான்.

திருமகளுடன் கூடிய திருமாலில் தொடங்கி, நாதமுனிகள் ஊடாக நமது ஆச்சார்யர் வரை ஆச்சார்ய பரம்பரையில் உள்ள அனைவருக்கும் நமது வணக்கத்தைத் தெரிவிக்கும் செய்யுள் இது.

ஸ்ரீமன் நாராயணனிடம் தொடங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில் இடம் பெற்றிருக்கும் மற்ற ஆச்சார்யர்கள் யார்? வரிசையாக எல்லாப் பெயர்களையும் பார்ப்போம்.
மகாலக்ஷ்மியுடன் இணைந்திருக்கும் மகா விஷ்ணு.
மகாலட்சுமி
விஷ்வக்சேனர்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
ராமானுஜர்
-இந்தப் பட்டியலில் மகாலக்ஷ்மி இரண்டு முறை வருவதைப் பார்க்கலாம். முதலில் மகாவிஷ்ணுவுடன் இணைந்து, பிறகு தனியே! இது எப்படி என்றால், எல்லா வைணவக் கோவில்களிலும் கருவறையில் இருக்கும் மூலவரான பெருமாளின் மார்பில் மகாலட்சுமி இருப்பார். அது தவிர சில கோவில்களில் பக்கத்திலும் இருப்பார். தனிச் சன்னிதியிலும் இருப்பார்.

மகாலக்ஷ்மியின் கருணைதான் நமக்குப் பெருமாளின் அருளைப் பெற உதவுகிறது.

ஒரு படித்த இளைஞன் வேலைக்காக இன்டர்வியூவுக்குப் போகிறான். அவனுக்குப் பல நிலைகளில் வெவ்வேறு உயர் அதிகாரிகளிடம் இன்டர்வியூ இருக்கும். இறுதியாகப் பொது மேலாளர் அவனை இன்டர்வியூ செய்கிறார். அவர் தேர்வு செய்து விட்டாலே அவனுக்கு வேலை நிச்சயம். ஆனால் அவன் தலைமை அதிகாரியையும் சந்திக்க வேண்டி இருக்கும். அப்போது தலைமை அதிகாரியுடன் பொது மேலாளரும் இருப்பார். தலைமை அதிகாரிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கூட, பொது மேலாளர் அவனுக்குப் பரிந்து பேசுவார். (‘இல்லை சார், பிளஸ் 2-வில் மார்க் குறைவாக இருந்தாலும் கல்லூரியில் நல்ல மார்க் வாங்கி இருக்கிறார்’) கருணைக் கடலான மகாலக்ஷ்மித் தாயாரும் இதுபோல் பெருமாளிடம் ‘இவருக்கு அருள் புரிய வேண்டும’ என்று பரிந்துரைப்பார்.

விஷ்வக்சேனர் என்பவர் சேனைநாதர். அதாவது படைகளுக்குத் தலைவர். இவர் யானை முகம் கொண்டவர். ஆனால் இவர் விநாயகர் அல்ல. இவரது மனைவியின் பெயர் ஸுத்ரவதி.

நம்மாழ்வார் விஷ்வக்சேனரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். தாமிரபரணிக் கரையில் திருநகரி என்ற ஊரில் காரியார்- உடைய நம்பி தம்பதிக்குப் பிறந்தவர். (இவர் பிறந்ததால் அந்த ஊருக்கு ஆழ்வார் திருநகரி என்ற பெயர் வந்தது). பிறவியிலே ஞானியான இவர் மதுரகவி ஆழ்வாரால் இனம் கண்டுகொள்ளப்பட்டவர்.

நம்மாழ்வார் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரை விட வயதில் மூத்தவரான, அந்தண குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் காலில் வீழ்ந்து வணங்கியதுடன் நம்மாழ்வாரின் இறுதிக்காலம் வரை அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.

நம்மாழ்வார் மீது இவர் இயற்றிய ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகம் (பத்துப் பாடல்கள்) நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. திருமாலைப் பற்றிப் பாடாவிட்டாலும், திருமாலின் பெருமையை உலகுக்கு உணர்த்த வந்த நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் மதுரகவியும் ஆழ்வார் என்று அங்கீகரிக்கப்பட்டவர்.

ஒரு காலகட்டத்தில் வழக்கில் இல்லாமல் மறைந்துவிட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரை தியானித்துப் பெற்று இவ்வுலகுக்கு வழங்க நாதமுனிகளுக்கு உதவியாக இருந்தது மதுரகவி ஆழ்வாரின் ‘கன்னி நுண் சிறுத்தாம்பு’தான்.

நம்மாழ்வாருக்குப் பிறகு நாதமுனிகள், அவரது சீடர் உய்யக்கொண்டார், அவரது சீடர் மணக்கால் நம்பி, அவரது சீடர் ஆளவந்தார், ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி, பெரிய நம்பியின் சீடர் ராமானுஜர்.

ராமானுஜருக்குப் பின் அவரது பல சீடர்கள் வழியே இந்த ஆச்சார்ய பரம்பரை கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது.

துவக்கத்தில் நாம் பார்த்த கூரத்தாழ்வாரின் ‘லக்ஷ்மிநாத’ என்ற செய்யுள் வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையை மேலிருந்து துவங்கி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே!

-வேதாந்த தேசிகர்

4 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகும்: கதியைக் கலக்கும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை!

சென்னை:
தமிழகத்தில் மேலும் 4 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திர’ வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவில் வெயில் தகிக்கிறது. திருத்தணி, திருச்சி, வேலூர், மதுரை, கரூர், நெல்லை, வேலூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் மேலும் 4 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஆந்திர பகுதிகளில் தொடர்ந்து, வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி வெப்ப காற்று வீசுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 2 முதல் 3 டிகிரி வெப்பநிலையும், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 3 முதல் 4 டிகிரி வெப்பநிலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தச் சூழல் மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும். கடல் காற்றின் தன்மையை பொறுத்து, வெப்பநிலை குறையும். அதே சமயம் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை கோடை மழை இயல்பாக 43.6 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால் தற்போது அந்தக் காலக்கட்டத்தில் 42.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 4 சதவீதம் குறைவு.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக தக்கலை, போச்சம்பள்ளி, தாளவாடி, துவாகுடியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேன்கனிகோட்டை, சூளகிரியில் தலா 5 செ.மீ. மழையும், ஈரோடு, குடியாத்தம், அருப்புக்கோட்டை, குளச்சல், குழித்துறையில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தளி, கன்னியாகுமரி, திருவையாறு, திருப்பத்தூர், திருச்சுழி, விராலிமலை, திருப்பூரில் தலா 3 செ.மீ. மழையும், சத்தியமங்கலம், இரணியல், ஒகேனக்கல், பேச்சிப்பாறை, ஸ்ரீவைகுண்டம், நத்தம், பென்னாகரத்தில் தலா 2 செ.மீ. மழையும், சாத்தூர், பீளமேடு, வாடிப்பட்டி, பெரியகுளம், வாணியம்பாடியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

– என்று கூறினார்.

பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர்: அமைச்சரவை ஒப்புதல்

டோக்கியோ:

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது குறித்த மசோதாவுக்கு, ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 83) நாட்டின் 125-வது மன்னராகத் திகழ்பவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ல் அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று குறிப்பிட்டார்.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் இவர் ஒரு புதிய சரித்திரம் படைத்துள்ளார். இந்நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையை கைவிட்டாலும் மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மன்னிக்க மாட்டேன்: விக்கிலீக்ஸ் அசாஞ்சே

என் மீதான விசாரணையை கைவிட்டாலும், கடந்த 7 வருடங்களாக எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கியமான ரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்தது. இந்நிலையில், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்ற அசாஞ்சே மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக லண்டன் சென்று அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதும், அசாஞ்சே தன் கோபத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

என் மீது அவதூறு சுமத்தி 7 ஆண்டுகளாக தடுத்து வைத்திருந்த ஸ்வீடன் அதிகாரிகளின் செயலை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.

பாலியல் வழக்கு விசாரணையை ஸ்வீடன் கைவிடும் முடிவை ஈக்வடார் வரவேற்றுள்ளது. அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே, பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கீழ்த்தரமாக எழுதுகிறார்கள்: ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு; உருவபொம்மை எரிப்பு!

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிப்பது குறித்து நேற்று பேச்சினூடே குறிப்பிட்டார். அப்போது அவர், ‘ஏன் இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள்?’ என்று பேசினார். இந்தப் பேச்சு தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், சென்னை அம்பத்தூரில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ரஜினியின் உருவ பொம்மையை சிலர் எரித்தனர். ‘ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!

திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர்.  மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல் எப்போதுமே இனிமையானதுதான். உடுமலைப்பேட்டை கடந்து சற்று தொலைவில், நீர்வீழ்ச்சி, சிவாலயம், அணைக்கட்டு என தெய்வீக அம்சமும் இயற்கைப் பேரழகும் இணைந்த இடத்தை தவிர்க்கலாகுமோ?

திருமூர்த்திமலை சென்றோம். வெள்ளை உடுப்புடன் தியானம் செய்ய பிரமிட் ஆலயத்துள் அமர்ந்தோம்.  இருளில் அமர்ந்து, ஒளியை நினைந்து கைகூடும் தியானத்தில், உள்ளப் பேரொளி உணர்வில் லயித்தது.

அதன் பின்னர் பரஞ்சோதி மகானுடன் சற்று நேரம் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய நாட்டு நடப்புகளை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அழகாக விரித்துரைத்தார். அண்டை மாநிலங்களில் மழை பெய்ய வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்து, அங்கெல்லாம் மழை நன்கு பொழிந்தால், நமக்கு காவிரியிலும் பாலாற்றிலும் இன்னும் நம் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் என்றார். ஏனென்றால், நம் தமிழக நில அமைப்பு, மற்ற மாநிலங்களின் ஆற்று வழி நீரை நம்பியுள்ளது. இதன் மூலம், நமக்கு மட்டும் பலன் என்று இல்லாது, அண்டை மாநிலங்களும் வளத்துடன் இருக்கும். நமது பிரார்த்தனை அவ்வாறு நம் மாநிலம் தாண்டி, அண்டை மாநிலங்களுக்கும் விரிந்து, பின் பிரபஞ்ச அளவில் அனைவரின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்மை வெகுவாகக் கவர்ந்தது.
நீங்கள் ஏதாவது கேட்க விரும்பினால் கேளுங்கள் என்றார். முன்னதாக, பிரமிட் ஆலயத்தில் அமர்ந்திருந்தபோது, பரஞ்சோதி மகான் மேற்கொண்ட தவ வேள்வி பற்றியும் குண்டலினி தியானம் குறித்தும் உடன் வந்த நண்பர் புருஷோத்தமன் சொல்லியிருந்ததால், இதையே அவரிடம் கேள்வியாக முன்வைத்தேன்.

நீங்க குண்டலினி யோகம் பண்ணதா சொன்னாங்க. எனக்கு குண்டலினியை எப்படி நீங்க பயிற்சி செய்தீங்கன்னு சொல்லமுடியுமா?” என்று கேட்டுவிட்டு அமர்ந்தேன்.

குண்டலினி என்றால் என்ன? குண்டலினி தியானம் எவ்வாறு செய்வது? குண்டலினி எழுந்தால் என்னவாகும்? என்று அவரும் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார்.

இது ஒரு பெரிய முறை என்றாலும், ஓரளவு கோடிட்டுக் காட்டலாம் என்றவர், சிவபெருமானையும், பார்வதி தேவியையும் மனத்தில் தியானித்து எவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்புவது என்பதைப் புரியவைத்தார்.

குண்டலினி சக்தியை எழுப்புவது குறித்து, சித்தர்கள் சில ரகசியங்களைச் சொல்லியுள்ளனர்.

நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றலைத்தான் குண்டலினி என்பார்கள். அது ஒரு பாம்பைப் போல சுருளாகச் சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது. இந்த குண்டலினி சக்தி என்பது, நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை உணர்ந்து தூண்டுவதன் மூலம், அற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும்,  ஆற்றலாகவும் மாற்றிவிட முடியும் என்றார்கள் சித்தர்கள்.  ஆனால் அதற்கு முன்னர், நமக்கு நம் உடலைப் பற்றிய புரிதல் தேவை.  நம் உடல் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது. இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருக்கிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆக்ஞேயம், துரியம் என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே மூலம், தொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு, உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது. இவற்றில் பத்து நாடிகள் முக்கியமானவை. பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை  இவை இரண்டுக்கும் நடுவிலும், சிகுவை  உள்நாக்கிலும், காந்தாரி இடது கண்ணிலும், புருடன் வலது கண்ணிலும், அத்தி வலது காதிலும்,  அலம்புடை இடது காதிலும், சங்கினி பிறப்பு உறுப்பிலும், குரு ஆசனவாயிலிலும் ஓடுகிறது.

குண்டலினி என்பது, அசைவற்ற பாம்பினைப் போன்ற நிலையில் அமைதியாக இருக்கும். ஒரு பாம்பைச் சீண்டினால் என்ன ஆகும்? அது அப்படியே சீறிக் கிளம்பும் இல்லையா! அவ்வாறு சீறிக் கிளம்பும் பாம்பு ஊர்ந்து செல்ல வேண்டும் இல்லையா!? இப்படி குண்டலினியை நாம் தூண்டிவிடும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல்நோக்கிக் கிளம்பும். அந்த சக்தி மூலாதாரத்திலிருந்து மேலே மேலே பயணித்து, அதனை துரியம் என்கிற உச்சந் தலை வரையிலும் கொண்டு வரலாம். இந்த துரியத்திற்கு குண்டலினி சக்தியைக் கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறது. இதனை “சஞ்சார சமாதி” என்பார்கள். இப்படியாக குண்டலினியை துரியத்துக் கொண்டுவந்தால், நம் உடலின் நிலை எப்படி இருக்கும்?!
உணர்வற்று, அசைவற்று, நினைவற்று எல்லாம் பிரம்மத்தில் லயித்திருக்கும்.

இந்த குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும் என்கிறீர்கள்.. சரி.. குண்டலினி ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திக் கொண்டு போக வேண்டுமா? என்று கேள்வி உங்கள் மனத்தில் ஓடும்.  குண்டலினி என்பது ஒன்றும் மாய மந்திரம் இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் நுட்பம். இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

குண்டலினியை எழுப்ப, முதலில் சாதகன் மெய்யான குருவைக் கண்டறிய வேண்டும். இதற்கு சாதகன் ஆசைகளைக் குறைந்தவனாய், தீவிர வைராக்கியம் உள்ளவனாய் தூய மனம் உள்ளவனாய் இருக்க வேண்டும். அவனை மெய்யான குரு தானாகவே அருகில் வருவார். அவரே முன்னின்று அரவணைத்து அவனை வழி நடத்துவார்.  இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான்.  குண்டலினி எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆகவே சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிட்டால் அந்த ஆவலைத் தகர்க்கத் தக்க சக்தி அற்றவன் ஆகிவிடுவான்.

பொதுவாக, பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவற்றால் குண்டலினியை எழுப்ப முடியும். ராஜயோகிகள் சலனமற்ற  தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்ய மக்கள் பக்தி,  அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.  ஞானிகள் பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவை எல்லாவற்றையும் விட, நயன தீட்சையாகிற குருவைப் பார்த்தல் (தரிசித்தல்), ஸ்பரிச தீட்சையாகிற குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவற்றால் குண்டலினி சட்டென எழும்பும்.

பொதுவாக, சிவபெருமானை சக்தியுடன் கூடிய சிவமாக தியானிக்க வேண்டும். சீவன் சிவனுடன் கலந்த நிலை. சீவன் சிவன் ஐக்கிய நிலை. இதை நான் மனத்தால் உணர்ந்தால் இந்த தியான யோகத்தால் யோகமுண்டாகும் என்று கூறினார் பரஞ்சோதி மகான்.

படம் துவங்கும் முன்னே ரூ.350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் ’சாஹோ’

தற்போது ரூ1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட படம் பாகுபலி. இதில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபாஸ்.

பிரபாஸ் தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில் சங்கர்-இசான்-லாய் இசையில் மதி ஓளிப்பதிவில் சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

தற்போது “சாஹோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை ரூ.350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈன்ற போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.

“அம்பாள்,’படி’ அளப்பாள்”


பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை.
இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!

(“நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை
ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே
எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து
எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.–விச்வநாதய்யர்)

கட்டுரையாளர்; ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீஸி.எஸ்,விக்குப்பொத்துக்கொண்டு
வந்து விட்டதாம்.

“எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா
கிடக்கிறதுஇந்தத்தரித்திரம்பிடித்தஊரில்இத்தனை யானையையும், ஒட்டையையும், ஜனங்களையும்  கட்டித்தீனி போடுவதென்றால் எப்படி?” என்கிற ரீதியில்பெரியவாள்
காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக ” நீ ஏன்பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா
அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும்
நிறைய அளப்பா”என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல
தெரியவில்லை. ஆனால் சொல்லத் தெரிந்தது,

மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில்
புற்றீசலாகப்பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டே யிருந்ததுதான்.

வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்வழங்கி வந்ததல்லவா? வந்த
பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.

“நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா(இதை ஸி.எஸ்,வி.என்னிடம்
கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த
மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து
ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து
எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன்.ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப
நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!.

“பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும்
இல்லை. இருந்தாலும் ‘எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா

பிரதமர் மோடியைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்: காரணப் பட்டியல் பெரிசு!

புது தில்லி:

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம். அவர் மோடியை சந்திப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்க, தான் சந்தித்த காரணத்தை பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார் ஓபிஎஸ்.

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள், தேவைகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினோம் என்று கூறிய அவர், விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அணி ஆதரவு அளிக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால், பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அரசியல் ரீதியாக அவரிடம் எதுவும் பேசவில்லை என்றார்.

தமிழக மக்களுக்கு இப்போதைக்கு என்ன தேவையோ அதனை அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக கோரிக்கை வைத்தோம் என்று கூறினார். அதாவது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எடுத்து கூறினோம்; அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை.
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர். தேசிய வங்கிக்களில் விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்று கூறினார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸுடன், மைத்ரேயன் எம்பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மீண்டும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இரு அணி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் மோடியைச் சந்தித்த எடப்பாடிக்கு அவர் முழு ஆதரவு அளித்தது போல் செய்திகள் வெளியாயின. இது ஓபிஎஸ் அணிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உடனடியாக ஏற்பாடு செய்யப் பட்டதாக வெளிவட்டாரத்தில் கூறப்பட்டது.

கருணாநிதி பங்கேற்பில்லாமல் அவரின் வைரவிழா நடக்கும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:
கருணாநிதிக்கு நடைபெறும் வைரவிழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவர் தோல்வியே அடையாமல் தொடர்ந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபது ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அதனை பெரிய அளவில் கொண்டாட திமுக. ஏற்பாடு செய்து வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனியாவுக்குப் பதிலாக ராகுல் இந்த விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது உடல்நலம் குன்றி, வீட்டிலேயே ஓய்வெடுத்துவருவதால், இந்த விழாவில் அவர் பங்கேற்பாரா என்று ஐயம் எழுந்தது. இருப்பினும் அவர் பங்கேற்பார் என சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்தார். இருப்பினும், அந்த நேரத்தில் மருத்துவர்கள் அனுமதித்தால் பங்கேற்பார் என்றார்.