தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாநில அரசு அவ்வப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஞாயிறு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைவதால், நேற்று மாநில அரசு மீண்டும் அதே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், தொற்று நிலையைக் கட்டுப்படுத்த வேண்டி இருப்பதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆக.9-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
- தற்போதைய தளர்வுகளே ஆக.9 வரை தொடர்ந்து நீட்டிக்கும். இதில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- கூடுதலாக வேறு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.
- அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால் குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம்.
- விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொது இடங்களில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது ஆகியவற்றை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப் பட்டுள்ளது
என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
கடந்த அதிமுக., ஆட்சியின் போது, ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட நேரத்தில், ஊரடங்கு தேவையற்றது என்றும், ஊரடங்குக்கு எதிராகவும் பேனர் பிடித்து முழக்கமிட்ட ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வரும் நிலையில், இன்னொரு ஊரடங்கை தமிழ்நாடு தாங்காது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், பதவி ஏற்ற காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் முடியும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப் பட்டே வந்துள்ளது. ஆக… ஆக… ஆக.9ம் தேதி வரை தற்போது ஸ்டாலினால் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.