மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த தடைவிதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ” மத்திய அரசின் துறைகளின், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு தொடர்பாக சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுடில் ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் விநியோகம் சார்ந்த நிறுவனங்கள் டிசம்பர் 31, 2023க்குள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்காள கிரிக்கெட் சங்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசு நடத்தி வரும் கல்வி தொலைக்காட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் கல்வி தொலைக்காட்சி பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.
