பெங்களூரு: கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக., முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அருதிப் பெரும்பான்மையைத் தொட்டுவிடும் என்றுதான் அதன் முன்னிலை நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட எடியூரப்பா மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளையும் அவர் துவங்கிவிட்டார்.
வியாழக்கிழமை மே 17 அன்று பதவி ஏற்பு விழாவுக்கே அவர் தயாராகிவிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிவந்தார்.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சிலவற்றில் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்பட்டது. ஓரிரு கருத்துக் கணிப்புகள், தனிப் பெரும் கட்சியாக பாஜக., உருவெடுக்கும் என்றன. அதன்படி, தற்போதைய தேர்தல் முன்னிலை நிலவரங்கள், பாஜக., தனிப் பெரும் கட்சியாக உருவெடுப்பதைக் காட்டி வருகின்றன. இன்னும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகள் உள்ளதாலும், இடைவெளி குறைவாக இருப்பதாலும் தெளிவான முடிவுகள் தெரியாவிட்டாலும், பாஜக., ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையைத் தொட்டு விடும் என்ற நிலையே தெரிகிறது.
இதனிடையே, முன்னதாகவே தன்னம்பிக்கையின் அடிப்படையில், எடியூரப்பா வரும் 17-ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்தது மட்டுமல்லாமல் கன்டீரவா ஸ்டேடியத்தையும் முன்பதிவு செய்துள்ளாராம், அதுவும் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே!