மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற கொள்கை முழக்கத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி வருகிறார்.
இதே போல அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
இவ்வாறு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவரது கூட்டத்துக்கு பலர் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் வந்ததும் வர வைக்கப் பட்டதும் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பங்குபெறும் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவ்வாறு ஆண்டிப்பட்டியில் நடைபெறும் கூட்டத்திற்கு பங்கேற்கும் பெண்ணுக்கு ரூபாய் 200 டோக்கன் இந்த வண்ண கவரைக் கொடுத்தால் உறுதி என்று கூறியிருக்கிறார்கள்
பணத்தை நேரடியாகக் கொடுக்காமல், தகுதி, இயல்புக்கு ஏற்ப வண்ண வண்ண கவரில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து, இந்தக் கவரைக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 200 முதல் மேற்படி பணம் உறுதியாகக் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியின் பேரில் கிராம சபைக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது!
ஆர்கே நகரில் போட்டியிட்ட டிடிவி தினகரன், ரூ.20 பணத்தாளில் வாக்காளர் அடையாளத்தை எழுதிக்கொடுத்து, அதை டோக்கன் பணமாக, அட்வான்ஸாகக் கொடுத்து பின்னர் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார் என்று ஆர்.கே.நகர் வாசிகள் அவ்வப்போது போர்க் கொடி தூக்கி வருகின்றனர்.
தனது தொழில் முறை ரகசியத்தை ஸ்டாலினுடன் தினகரன் ஒரு விடுதியில் வைத்து பகிர்ந்து கொண்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த உத்தியை இப்போது திமுக.,வும் கடைப்பிடித்து வருகிறது என்று கூறுகிறார்கள் நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருப்பவர்கள்.
இது குறித்த விவரத்தை ஒருவர் செய்தியாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப் போக, இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கிறது!