இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.
இத்திருக்கோவில் தோற்றம் குறித்து திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம், மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவறை கோவிலாகும். கோவில் சன்னதிக்குள் நுழைந்தவுடன் தொடக்கத்தில் கருட மண்டபம் காட்சியளிக்கிறது.
இங்குள்ள பெருந்தூண்கள் கி.பி. 16-ம் நூற்றாண்டு விசயநகர வேந்தர் பாணியில் விளங்குகின்றன. இந்த குடவறை கோவில் சிறிய சதுரமான கருவறையாக உள்ளது. இக்கருவறையில் யோகாசனத்தில் குத்திட்டு அமர்ந்த கோலத்தில் நரசிம்மர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
இந்த உருவம் தனியாக செய்யாமல் பாறையிலேயே வெட்டி செதுக்கப்பட்டுள்ளது விசேஷமானதாகும். நரசிங்க பெருமாள் கோவில் பெரிய திருச்சுற்று சுவருக்குள் நரசிங்க பெருமாள் சன்னதி, நரசிங்கவல்லி தாயார் சன்னதி என்று 2 சன்னதிகளை கொண்டு விளங்குகிறது.
இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் வடபுறம் நரசிங்கவல்லி தாயார் கோவில் அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கருணை பொழியும் முகத்துடன் தோற்றமளிக்கிறார்.
தாயாரின் மகிமை :
நரசிங்கவல்லி தாயார் என அழைக்கப்படுகிற மகாலட்சுமியை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் பெற்று இன்புற்று வாழலாம். மேலும் பல பலன்கள் கூறப்பட்டுள்ளது.
நீண்ட நாள் திருமணமாகாமல் இருந்தால் இரண்டு மாலைகள் வாங்கி அம்பாளுக்கு சாத்தி பூஜை செய்துவிட்டு ஒரு மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு 11 முறை சுற்றி வணங்கிவிட்டு வீட்டில் வைத்தால் ஒருசில மாதங்களிலேயே தாயாரின் அருளாளால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
இதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 12 வாரங்கள் அம்பாளுக்கு ஐந்து நெய்விளக்கு ஏற்றி வணங்கினால் குழந்தைச்செல்வம் கிடைக்கும் என்றும், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் வேலை கிடைக்க வேண்டி ஐந்து வாரங்கள் செவ்வாய்தோறும் நரசிங்க பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் வேலை கிடைக்கும் எனவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
பாவங்கள் போக்கும் தீர்த்தம் :
திருக்கோவிலின் வெளிப்புறத்தினையொட்டி வடதிசையில் அழகிய தாமரைக்குளம் ஒன்று உள்ளது. இதில் உள்ள தீர்த்தத்தினை “சக்கரத்தீர்த்தம்” என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இத்தீர்த்தமானது, அனைத்து புண்ணிய நதிகளுக்கும் ஒப்பானது என்றும், இத்தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்து, எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், நவராத்திரி விழாவின்போது வெள்ளிக்கிழமை அன்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த பூஜையில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை வணங்கினால் கோடி நண்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
பாண்டிய மன்னரின் அமைச்சராக இருந்த மாறங்காரி என்பவர் யானை மலையில் கி.பி. 770-ல் நரசிங்க பெருமாளுக்கு ஒரு குகைக்கோவிலை அமைத்தார் என்று அங்குள்ள வட்டெழுத்து சாசனங்கள் கூறுகிறது. இந்த ஆனைமலை பகுதியில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளதை தமது மதுரை பதிகத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிட்டு இருக்கிறார்.
யானை மலை வரலாறு :
இந்த யானைமலைக்கு ஒரு கதை உண்டு. அதாவது பாண்டிய மன்னனை வீரத்தால் வெல்ல முடியாத சோழ மன்னன் சூழ்ச்சியாலும், மந்திரத்தாலும் அவனை அழிக்க கருதினான். அதற்காக உதவியை நாடி தன் நாட்டு சமணர்களுக்கு ஓலை அனுப்பினான்.
சமணர்களும் அதற்கு சம்மதித்து அசோக மரத்தின் நிழலில் பெரும் யாகத்தீயை வளர்த்தனர். இதிலிருந்து மூன்றுலகமும் நடுங்கச்செய்யும் பெரும் யானை ஒன்றை வெளிவரச்செய்தனர். மதுரையோடு பாண்டியனையும் அழிக்கும்படி அந்த யானைக்கு ஆணையிட்டனர்.
பெரும் முழக்கத்துடன் மதுரை நோக்கி வருவதை அறிந்த பாண்டியன மன்னன், அஞ்சி சிவபெருமானிடத்தில் அதனை தடுக்குமாறு வேண்டினான். உடனே அசரீரி மூலம் மதுரைக்கு வெளியே கிழக்கு பக்கத்தில் அட்டாவை மண்டபம் கட்டுமாறு பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த மண்டபத்தின் மீது அட்டாவை சேவகனாய் சிவபெருமான் தோன்றினார். பின்னர் நரசிங்காஸ்திரத்தால் சமணர்கள் ஏவிய யானையை அழித்தார். அதுவே தற்போதுள்ள யானைமலையாகும். இக்குன்றத்திலேயே நரசிங்க பெருமாளுக்கு கோவில் ஒன்றை பாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் திருவிளையாடல் புராணம் உணர்த்துகிறது.
சக்கர தீர்த்தத்தில் நீராடிய சிவன் :
சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ததினால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்காக கெஜரி ஷேத்திரமாகிய யானைமலையின் அடிவாரத்தில் உள்ள சக்கரத் தீர்த்தத்தில் சிவபெருமான் நீராடி ஒரு மண்டல காலம் நரசிம்மரை வழிபட்டு பிரம்மகத்தி தோஷம் நீக்கியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து ரோக நிவாரணி :
இங்குள்ள தெப்பக்குளத்தில் புவியியல் சத்து நிறைந்த நீரை உடையது என்றும் அனைத்து ரோக நிவாரணி என்றும் இயற்கையாகவே பல மூலிகை நீரை கொண்டதால்தான் பல நோய்களை போக்குவதுடன் பாவங்களையும் போக்கும் என பத்துப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.




