தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர்.
உக்ரதெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள். இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது.
குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள்.
கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவஅமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.
ஆடித்திருவிழா: இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்றுநாட்கள் திருவிழா உண்டு.
பிரார்த்தனை:
திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
முகவரி:
அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில்,
ஓம் சக்தி நகர்,
கள்ளிக்குப்பம்,
அம்பத்தூர்,
சென்னை.
போன்: +91 98407 36575.



