உலகக் கோப்பை டி20 – இறுதிப் போட்டி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்தின் வேகத்திலும் சுழலிலும் சிக்கிய பாகிஸ்தான்
இன்று உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி (137/8, ஷான் மசூத் 38 ரன், பாபர் ஆசம் 32, ஷதாப் கான் 20, ரிஸ்வான் 15, சாம் கரன் 3/12, ரஷீத் 2/22, ஜோர்டான் 2/27) இங்கிலாந்து அணியிடம் (19 ஓவரில் 138/5, பென் ஸ்டோக்ஸ் 52*, ஜாஸ் பட்லர் 26, ப்ரூக் 20, மொயின் அலி 19, சால்ட் 10, ரவுஃப் 2/23) ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
திருப்பம் ஏற்படுத்திய ஓவர்
பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷீத் வீசிய 12-ஆவது ஓவர் போட்டியின் போக்கை முற்றிலுமாக இங்கிலாந்தின் பக்கமாகத் திருப்பியது. அது பாகிஸ்தானின் அடித்தளத்தையே அசைத்துவிட்டது. மெய்டன் ஓவரான அதில் நீடித்து ஆடிக் கொண்டிருந்த பாபர் ஆஸமை அதில் ரசீத் வெளியேற்றினார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி அடுத்த எட்டு ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து, 54 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
திணறிய பாகிஸ்தான்
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சும், சுழற்பந்துவீச்சும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தன. பாகிஸ்தான் பேட்ஸ் மேன்களை எந்த வகையிலும் நிலைத்து நின்று ஆட முடியாதபடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் இங்கிலாந்தின் பந்துவீச்சு இருந்தது.
4 ஓவர்களை வீசிய சாம் கரன், வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதில் ரஷீத் வீசிய ஒரு ஓவரில் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் வீசிய 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் கிறிஸ் ஜோர்டன் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்தின் ரன் சேஸ்
பவர் பிளேயில் பாகிஸ்தானுக்கு என்ன நேர்ந்ததோ அதுவேதான் இங்கிலாந்துக்கும் நடந்தது. பவர் பிளே ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களை மட்டுமே எடுத்தது. சாஹின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சு இங்கிலாந்தை திணறடித்தது. இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆனால் பவர் பிளேயில் ஆட்டத்தை தொடங்கிய பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அரைச் சதம் அடித்தார். அவர் அவுட் ஆகி இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். பாகிஸ்தான் அணி வெற்றி பெறவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
நாலாவது ஓவரில் ஃபில் சால்ட் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் குவிக்கும் வேகமும் உடனடியாகக் குறைந்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 6-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார். 10 ஓவர்கள் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்திருந்தது இங்கிலாந்து. 60 பந்துகளில் 61 ரன்களை எடுக்க வேண்டும், 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது.
தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள். 11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
ஆனால் 13-ஆவது ஓவரில் ஷதாப் வீசிய பந்தில் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம் பிடிகொடுத்து ப்ரூக் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன்களை எடுக்கத் தடுமாறினார்கள். 14-ஆவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
ஆனால் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர். 16-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். 17-ஆவது ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகளை விளாசினார். அதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது. 19-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.
விருதுகள்
இந்த வெற்றியின் மூலம் ஒரே நேரத்தில் 50 ஓவர் போட்டியிலும் 20 ஓவர் போட்டியிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது. இந்தத் தொடரின் நாயகனாகவும் ஆட்ட நாயகனாகவும் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் சாம் கரன் அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 12.88 கோடி ரூபாய் முதல் பரிசாகப் பெற்றது. பாகிஸ்தான் 6.44 கோடி ரூபாய் பரிசு பெற்றது. அரையிறுதிப் போட்டி வரை வந்த நியூசிலாந்து, இந்திய அணிகள் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு பெறுகின்றன. சூப்பர் 12 பிரிவுகளில் ஆடிய ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாபே, நெதர்லாந்து அணிகளுக்கு தலா 1.61 கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்கும்.
சாதனையாளர்கள்
இப்போட்டியில், இந்தியாவின் விராட் கோலி 296 ரன் களுடன் அதிக ரன் கள் அடித்தவர் ஆகிறார். அதிக அரைசதம் அடித்ததும் விராட் கோலிதான். இலங்கையின் ஹசரங்கா 15 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் ஆகிறார். நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரோஸ்கோ சதம் அடித்த வீரர்கள். ஜிம்பாபேயின் சிக்கந்தர் ராசா 11 சிக்சர்கள் அடித்து அதிக சிக்சர் அடித்த வீரர் ஆகிறார். 26 ஃபோர்கள் அடித்த இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் இப்போட்டியில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர். அதிக மெய்டன் வீசிய பந்துவீச்சாளர் நமது அணியின் புவனேஷ் குமார்.