ஈரோடு மாவட்டத்தில் திருடிச் சென்ற மினி லாரியில் டீசல் இல்லாததாலும், டீசல் போட கையில் பணம் இல்லாததாலும் அதை அப்படியே சாலை ஓரத்தில் திருடிய நபர் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சொந்தமாக மினி லாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல தன்னுடைய மினி லாரியை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார்.
காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு மினி லாரி இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறை புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை யினர் ரவியின் மினி லாரியை தேடி வந்தனர். மேலும், நண்பர்கள் மூலமாகவும் வண்டியைத் தேடி வந்தார் ரவி. அப்போது அவருடைய நண்பர் ஒருவர் “உன்னுடைய மினி லாரியை கோவை இடுகம்பாளையம் ரோட்டில் பார்த்தேன். நீண்ட நேரமாக அங்கேதான் இருக்கிறது” என்று தகவல் கொடுத்துள்ளார்.
இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரவி இடுகம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கே அவருடைய மினி லாரி நின்றுகொண்டிருந்தது. யாரும் வண்டிக்கு உரிமைகோரியபடி வரவில்லை.
காவல்துறையினர் வண்டியை எடுக்க முயன்ற போது வண்டியில் டீசல் இல்லை என்பது தெரிந்தது. டீசல் இல்லாததால் வண்டியை திருடிய நபர் அதை சாலையில் நிறுத்திச் சென்ற விவரம் அவர்களுக்கு புரிந்தது. வண்டியை ரவியிடம் ஒப்படைத்த காவல்துறையினர், மினி லாரியை திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.