ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உ
ட்பட்ட முத்துலிங்காபுரத்தில் காளிராஜ் (38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. முத்துலிங்காபுரம், கோவிந்தநல்லூர், சோரம்பட்டி, சங்கரலிங்கபுரம், ஓ.கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உராய்வு காரணமாக திடீரென ஒரு அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இந்த விபத்தில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி, விருதுநகர் ஆர்ஆர் நகரிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.