திருநெல்வேலி: வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வான தாமிரபரணி புஷ்கரத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியும் இடர்ப்பாடும் நெல்லையில் தொடரத்தான் செய்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் இந்து இயக்கங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்து ஆட்சியரிடம் பேசிச் சென்றும், முன்னர் அறிவித்த நிலையிலேயே குறுக்குத் துறையும் தைப்பூச மண்டபமும் தடைப் பட்டியலில் தொடர்கின்றன. இது நெல்லைவாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சியை ஒட்டி வரக் கூடிய தாமிரபரணி மகாபுஷ்கர நிகழ்வுக்காக, கடந்த ஓராண்டுக்கு மேலாகவே ஆன்மிக அமைப்புகள், ஆன்றோர்கள் கடும் முயற்சி எடுத்து ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். ஆட்சியர் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டமும் போடப் பட்டு, ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.
ஆனால், புஷ்கர நிகழ்வுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், திடீரென்று நெல்லையின் மிக முக்கிய படித்துறைகளான தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை இரண்டையும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது மாவட்ட நிர்வாகம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குக் காரணங்களாக, இது மிகவும் குறுகலான பகுதி, வாகன நிறுத்தம் இல்லை, நீர்ச் சுழல் மிகுதி, வெள்ளம் வந்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், இந்த இரு துறைகளே நெல்லை நகரத்தின் பகுதியில் நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில் சற்று தொலைவில் உள்ள மிக முக்கியமான துறைகள் என்பதால் நெல்லைவாசிகள் இவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, இந்தத் துறைகளில் புஷ்கர பூஜை, ஹோமங்கள், ஹாரத்தி செய்வதன் அவசியத்தை எடுத்துக் கூறினர். இருப்பினும் ஆட்சியர் அதனைக் கேட்பதாக இல்லை. திடீரென, அன்று வரை திறந்த நிலையில் பயன்படுத்தி வந்த தைப்பூச மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு அதிரடி காட்டியது நிர்வாகம்.
இதை அடுத்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப் பட்டது. அப்போது சமாதானப் பேச்சு நடத்தப் பட்டு, ஆட்சியரிடம் எடுத்துச் சொல்ல அதிகாரிகள் முன்வந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஆட்சியரை சந்தித்து இந்து முன்னணி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த காணொளிக் காட்சி…
அப்போது தாம் மீண்டும் அதிகாரிகள் குழுவை அனுப்பி, பரிசீலனை செய்வதாக ஆட்சியர் சொன்னதுடன், அது குறித்த செய்திக் குறிப்பும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஆர்டிஓ., காவல் துறை ஏசி., காவல் அதிகாரிகள் என சிலர் வந்து பார்த்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியை ஆய்வு செய்தனர். அதிகாரிகள் ஆய்வின் போது, அங்குள்ள உள்ளூர் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்களும் உடன் நின்று, அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.
ஆனால், அந்த இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், தைப்பூச மண்டபத்தை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். இந்த இடம் குறுகலாக உள்ளது. பலர் வந்து குளிக்க வரும் போது திடீரென நெரிசல் ஏற்படலாம். அதனால் விபரீத விளைவுகள் நேரலாம். எனவே புஷ்கரத்துக்கு தைப்பூச மண்டபத்தை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்ய்தனர்.
அப்போது உடன் இருந்த ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த அன்பர்கள் சிலர் இந்தப் பகுதியின் ஆன்மிக முக்கியத்துவம் குறித்து எடுத்துச் சொல்லி, குறிப்பிட்ட அளவு மக்களை மட்டும் அனுமதிக்கலாம், அல்லது கோயிலைச் சார்ந்த அல்லது அடையாள அட்டை பெற்ற ஆன்மிக அமைப்புகளைச் சார்ந்த உள்ளூர் நபர்களையாவது அனுமதித்து, வழிபாடுகளைச் செய்ய வழி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தைப்பூச மண்டபத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து, கைலாசபுரம் கோயிலுக்குச் சென்று பார்த்தனர். அறநிலையத்துறையைச் சேர்ந்த கைலாசபுரம் கோயிலின் அலுவலக உதவியாளரிடம் சாவி பெற்று, கைலாசபுரம் கோயிலைத் திறந்து பார்த்தார்கள். அதன் பின்னர், கோயில் நன்கு இடவசதியுடன் பெரிதாக உள்ளது. எனவே, ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளை கோயிலில் வைத்தே செய்து கொள்ளுங்கள் என்றனர். ஆனால், அதிகம் பேர் எதிர்பார்க்கப் படுவதால், அதற்கும் இடையூறு ஏற்பட்டது.
தொடர்ந்து, நெல்லையப்பர் கோயிலில் வைத்து ஆன்மிக வழிபாடுகளைச் செய்து கொள்ளுங்கள், ஆற்றில் வேண்டாம் என்றனர். அப்போது, நெல்லையப்பர் கோயிலில் நெய் விளக்கு ஏற்றுவதற்கே அவ்வளவு கட்டுப் பாடுகள் உள்ளன. அங்கே எப்படி ஹோமங்களைச் செய்ய அறநிலையத்துறை அனுமதிக்கும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து வாக்குவாதமே நீடித்தது. அப்போது, தீர்த்தக் கட்டமான தைப்பூச மண்டபத்தில், குறைந்தது எங்களை மட்டுமாவது அனுமதியுங்கள் நாங்கள் தாம்ரபரணி அன்னைக்கு தினமும் ஆரத்தி செய்யவாவது வேண்டும். அது இந்தப் படித்துறையில் இருந்து செய்ய வேண்டும் என்று கெஞ்சினர்.
ஆனால் அதிகாரிகளோ, அப்படிச் செய்தால் உங்களுக்குப் பின்னார் வரும் கூட்டத்தால் பிரச்னை பெரிதாகும். எனவே அனுமதிக்க முடியாது என்றனர். இருப்பினும், எங்களில் இருபது பேரை மட்டுமாவது இங்கே ஆரத்தி காட்ட அனுமதியுங்கள், நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு எங்கள் பூஜைகளைச் செய்கிறோம், குறைந்தது தீபாராதனை செய்யவாவது அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.
ஆனால் அதிகாரிகளோ, படித்துறை தாமிரபரணித் தண்ணீரில் இறங்கி பெண்களும் ஹாரத்தி செய்யும் இந்த வீடியோவைக் காட்டி, இதுபோல் செய்ய முனையும் போது, நிச்சயம் கூட்டம் கூடத்தான் செய்யும். கட்டுப்படுத்த முடியாது. எங்களால் மேலிடத்துக்கு பதில் சொல்ல முடியாது என்று என்று வாதிட்டனர். (தாமிரபரணிக்கு ஹாரத்தி காட்டும் அந்த வீடியோ….)
தொடர்ந்து கெஞ்சுதலும் மிஞ்சுதலுமாகவே நேரம் கடந்தது. அதிகாரிகள் தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று காலை, தைப்பூச மண்டபம் பகுதிக்குச் சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே மேலும் இரண்டு பெரிய புத்தம் புதிய பூட்டுகள் போட்டு பூட்டப் பட்டிருந்தது. பழைய பூட்டு உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது.
இதை அடுத்து, தைப்பூச மண்டபத்தில் இந்த முறை புஷ்கரத்தில் குளிக்கவே அனுமதிக்க மாட்டார்கள் என்ற பேச்சு நகர மக்களிடையே பரவியது. குறுக்குத் துறையும் அனுமதிக்கப் படவில்லை என்பதால், நெல்லை நகர மக்களுக்கு சோகம் அப்பிக் கொண்டது.