கணவனை கொலை செய்ய மனைவி கூலிப்படையை ஏவிய சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் ரோமன். இவர் அந்நாட்டிலுள்ள பல குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டில் ஒரு கேளிக்கை விடுதியில் மரியா என்ற பெண்ணை சந்தித்தார் ரோமன், இருவரும் காதலித்து 2010 ல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒன்றாக ஒரு உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்தனர். திடீரென்று அது நஷ்டத்தில் சென்றது. இதனால் கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இறுதியாக மரியா தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு எடுத்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக இருவரும் ஒன்றாக வாழ வேண்டியிருந்தது.
இந்த சூழலில் கஸ்டாவோ என்ற அடியாளை சந்தித்த மரியா தன் கணவரை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் அவரிடம் 1500 பவுண்டுகள் வழங்கியுள்ளார். கணவரின் புகைப்படத்தை அந்த அடியாளிடம் கொடுத்திருக்கிறார் மரியா.. புகைப்படத்தை கண்ட கஸ்டாவோ அதிர்ந்தார் ரோமன் அவருடைய நீண்டகால நண்பர். மேலும் அவருக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்தவர். உடனடியாக கஸ்டாவோ ரோமனிடம் அனைத்தையும் கூறியுள்ளார்..
மனைவியின் இந்த திட்டத்தால் அதிர்ந்த ரோமன், ஒரு திட்டம் தீட்டினார். தான் இறந்ததாக நடித்து ஒரு போலியான படம் எடுத்து கொடுத்தார் பின்னர் அந்த புகைப்படத்தை கஸ்டாவோ மூலமாக மரியாவிடம் அனுப்பினார்.
அந்தப் புகைப்படத்தை கண்ட மரியா முதலில் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது காவல்துறையினர் மறைந்திருந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். புகைப்படத்தை பெற்றுக்கொண்ட மரியா ரோமன் இறந்துவிட்டார் என்பதை கேட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி ஆடினார்.
அப்போது காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். தான் செய்த குற்றத்தை மரியா ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தினர். இப்பொழுது மரியாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.