தோஹா:
வளைகுடா நாடுகளில் ஒன்றான காத்தாரில், அதன் அண்டை நாடுகளுடனான உறவு மோசமடைந்து சீர்கெட்டுள்ளது. கத்தாருடன் மற்ற வளைகுடா நாடுகள் பிணக்கம் காட்டியதால், கத்தார் தனிமைப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கே அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சத்தால், முன்னதாகவே தயார் செய்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக சூப்பர் மார்கெட்களுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே, அங்கே பொருள்கள் வேகமாக காலியாகி வருகின்றன. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருள்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே, சூபர் மார்க்கெட்டுகளுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
கத்தார் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலும் சவூதி அரேபியா வழியாகவே வரும். இந்நிலையில், கத்தாருடன் உறவை துண்டித்துள்ள சவூதி அரேபியா, அந்நாட்டுடனான சாலை, கடல், விமான வழித்தடங்களை நிறுத்தி விட்டதால் பொருள்கள் வரத்து நின்று போயுள்ளது. வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் தோகாவின் ஹம்தா சர்வதேச விமான நிலையம் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தங்கள் நாட்டு வான் எல்லையில், கத்தார் விமானங்கள் பறக்கக்கூடாது என்று கத்தார் ஏர்வேஸுக்கு சவூதி அரசு தடை விதித்துள்ளது. இதனால் ரியாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் மக்கள் பலர் தவித்து வருகின்றனர். தற்போது, கத்தாரில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயங்கள் செல்லாக்காசாகி விட்டன. இந்நிலையில் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து இன்னும் 2 வார காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கெடு விதித்துள்ளனர்.
கத்தாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து துபையில் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் பலர் அங்கே பின் வாங்கியுள்ளதால் பங்குச் சந்தை 7.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
கத்தார் நாட்டில் மொத்தமுள்ள 6.5 லட்சம் இந்தியர்களில் 3.5 லட்சம் பேர் கேரள மாநிலத்தவர்கள். இங்கிருந்து இந்தியாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு இரு நகர விமான நிலையங்களுக்கும் தினசரி விமான சேவையும், கொச்சினுக்கு வாராந்திர சேவைகளும் உண்டு. விமான சேவைகள் முடங்கியுள்ளதால், கத்தாரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப பலரும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே இந்தப் பிரச்னைக்கு மூலகாரணமே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் என்று வளைகுடா நாடுகளில் விமர்சனம் எழுந்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியா பயணம் செய்த ட்ரம்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேற்காசிய விவகாரங்களை அலசுபவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Just received these two pictures from a Supermarket in #Qatar. #Panic pic.twitter.com/9uwT0aQlgT
— Julien Elie EL-HAJJ (@HajjJulien) June 5, 2017
Photos of long lines, empty shelves at Carrefour grocery stores in #Qatar following crisis. Qatar gets 40% of food supply by road via Saudi pic.twitter.com/rkC6IPydS1
— Joyce Karam (@Joyce_Karam) June 5, 2017