துபையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி்க்கு அநீதி இழைத்து ஒரு ரன் கோல்மால் செய்து தோற்பதற்கு காரணமாக இருந்த நடுவர் நிதின் மேனனுக்கே ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் டிவிட்டி, திட்டியுள்ளார்.
இதில் ஒரு சுவாரஸ்யம், சேவாக் முன்னாள் டெல்லி டேர் டெவில் கேப்டன். அவர் பரிந்து கொண்டு பேசியது பஞ்சாப் அணிக்கு. இப்படி கிரிக்கெட் நியாய தர்மத்தை சேவா வெளிப்படுத்தியுள்ளது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.
துபையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது டெல்லி கேபிடல்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி20 ஓவர்ளில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி டல்லடித்தது. வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இரு விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. 3 ரன்களை அல்வா துண்டு கணக்காக எடுத்து டெல்லி கேபிடல்ஸ் எளிதாக வெற்றியைச் சுவைத்தது.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஒரு ரன் கூடுதலாக எடுக்காமல் போனதால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால் சூப்பர் ஓவருக்கு முன்பாக, மயங்க் அகர்வாலும், ஜோர்டானும் களத்தில் இருந்தனர். ரபாடா வீசிய 19-வது ஓவரை சந்தித்த ஜோர்டான் ஸ்குயர் லெக் திசையில் தட்டிவிட்டு இரு ரன்கள் ஓடினார்.
ஆனால் வில்லன் போல், லெக் அம்ப்யர் நிதின் மேனன் வேகமாக ஓடிவந்தார். ஜோர்டன் 2-வது ரன் ஓடும்போது கோட்டை சரியாகத் தொடவில்லை. ஆதலால், ஒரு ரன் மட்டுமே வழங்க முடியும் என்றார். ஆனால், மூன்றாவது நடுவர் டி.வி. ரீப்ளேயில் பார்த்தபோது, ஜோர்டன் தான் ஓடிய இரு ரன்களையும் கிரீசுக்கு உள்ளே பேட்டை வைத்து தொட்டுவிட்டுத்தான் ஓடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
எனவே நடுவரின் தவறான தீர்ப்பால் ஒரு ரன் பஞ்சாப் அணிக்கு வேண்டுமென்றே மறுக்கப்பட்டது. அந்த ஒரு ரன் கிடைத்திருந்தால், பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றிருக்கும். இந்த ஒரு ரன் இல்லாமல் போனதால் தான் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்குச் சென்றது.
நடுவரின் தவறான தீ்ர்ப்பு குறித்து வீரேந்திர சேவாக் ட்வி்ட்டரில் கடுமையாக திட்டியுள்ளார் . “ ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஜோர்டான் இரு ரன்கள் ஓடியதில் அதில் ஒரு ரன்னை மறுத்து அறிவித்த நடுவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ர்தித் ஜிந்தா இது குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “கொரோனா காலத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பயணித்து துபை வந்து, 6 நாட்கள் தனிமைப் படுத்திக்கொண்டேன். 5 முறை கொரோனா பரிசோதனையும் எனக்கு எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு ரன் குறைவாக கொடுக்கப்பட்டது எனக்கு வேதனையைத் தருகிறது.
இதுபோன்ற சூழலில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தாவிட்டால் தொழில்நுட்பம் இருப்பதில் என்ன அர்த்தம். இந்த நேரத்தில் பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இது போன்று நடக்கக்கூடாது” என காட்டத்துடன் கூறியுள்ளார்.