சுபாஷிதம் : ஸ்பூர்த்திபதம்
108 ஞானமுத்துக்கள்
11. புகையும் நெருப்பை விட ஜ்வாலை சிறந்தது!
ஸ்லோகம்:
அலாதம் திஸ்துகஸ்யேவ முக்ஷூர்தமபி விஜ்வல|
மா துஷாக்னிரிவானர்சிர்தூமாயஸ்ய ஜிஜீவிஷு:||
முஹூர்தம் ஜ்வலிதம் ஸ்ரேய: ந ச தூமாயிதம் சிரம்|
மா ஹஸ்ம கஸ்யசித் கேஹே ஜனீ ராஜ்ஞ: கரோ ம்ருது:||
– மகாபாரதம்.
பொருள்:
கருங்காலி மரத்தின் கட்டை தீப்பந்தம் போல் பக்கென்று தீப்பிடித்து ஒரு முகூர்த்த கால நேரமாவது ஒளிவிடும். அது, உமியில் பற்றிய நெருப்பு போல நீண்ட நேரம் புகைந்து ஒளியில்லாமல் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும் என்பது போல் வாழாது. நீண்டகாலம் புகை விட்டுக் கொண்டு ஒளியின்றி வாழ்வதை விட ஒரு முகூர்த்த காலம் பிரகாசமான ஜ்வாலையோடு வாழ்வது மேல்.
விளக்கம்:
மகாபாரதம் உத்யோக பருவத்தில் குந்திதேவி தன் மகனான தர்மபுத்திரனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் மூலம் செய்தி அனுப்பி க்ஷத்திரிய தர்மத்தை போதிக்கும் ஒரு கதை உள்ளது. ‘விதுலோ பாக்கியானம்’ என்ற பெயரில் இது பிரசித்தியாக உள்ளது. இதில் விதுலா என்ற க்ஷத்திரிய பெண், போரிலிருந்து ஓடிவந்த தன் மகனிடம் கூறிய சொற்களாக இந்த சுலோகம் உள்ளது.
க்ஷத்ரிய தர்மத்தைக் கடைபிடித்து போரில் வெற்றியோ வீர சுவர்க்கமோ அடைய வேண்டும் என்று ஒரு தாய் தன் மகனுக்கு அளிக்கும் செய்தி இது. சஞ்சயன் என்ற தன் மகனின் கோழைத்தனத்தை கண்டித்து அவன் தாய் விதுலா இப்படிப்பட்ட மகனை எந்த தாயும் பெறக் கூடாது என்கிறாள் வேதனையோடு. இது வீரத் தாய்மார்களான வீரப்பெண்மணிகள் கடைபிடித்த உயர்ந்து எடுத்துக்காட்டு.
அதேபோல், ‘பல்நாட்டு’ யுத்தத்தில் (ஆந்திராவில் பல்நாடு என்ற இடத்தில் 1182 ல் நடந்த போர்) பாலச்சந்திரனுக்கு அவன் தாய் மாஞ்சாலா உபதேசிக்கிறார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆந்திர வீரன் ‘கட்கதிக்கனா’ வரலாறு கூட இப்படிப்பட்டதே!
யுத்த தர்மத்திற்கு மாறான முறையில் பகைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுற்றி வளைத்த போது புறமுதுகு காட்டாமல் போராடி வீர சுவர்க்கத்தை அடைந்த அபிமன்யுவின் புகழ் அழியாமல் நிற்கிறது.
பாரத நாட்டு எல்லையில் தம் வீரதீர பராக்கிரமத்தைக் காட்டி எதிரிகளின் கர்வத்தை அடக்கிய பரம வீர படைவீரர்களின் வீரவரலாறு இந்த ஸ்லோகத்தில் கூறியதுபோல் ஒளி வீசியவர்களின் வரலாறே!
சில ஆண்டுகளே இந்த பூமி மீது வாழ்ந்து சாசுவதமாக நம் இதயங்களில் வாழ்ந்து வரும் ஜகத்குரு ஆதி சங்கரரைப் போல, சுவாமி விவேகானந்தரைப் போல, சர்தார் பகத்சிங் போல வாழும் காலம் வரை பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும். சுய தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்த செய்யுள் அளிக்கும் செய்தி.
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்