
- பி.ஆர். மகாதேவன்
பாஜகவுக்கு எது நடந்தாலும் நன்மையே.
அதிமுகவுடனான கூட்டணி வென்றால் தேர்தல் வியூகம் வெற்றி என்று ஆகும்.
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
திமுக வென்றால் நாடாளுமன்றத்தில் தேவைப்படும்போது பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொள்ளும்.
*
அதிமுகவுக்கு எது நடந்தாலும் நன்மையே.
கூட்டணி வென்றால் ஆட்சி கிடைக்கும்.
தோற்றால் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க உதவியதாக ஆகும்.
*
கிறிஸ்தவர்களுக்கு எது நடந்தாலும் நன்மையே
திமுக வென்றால் 100% பலம்.
அதிமுக வென்றால் 70-80% பலம்.
பாஜக வென்றால் 50% பலம்,
*
இந்துக்களுக்கு திமுக வென்றால் 100% கஷ்டம்.
அதிமுக வென்றால் 70-80% கஷ்டம்.
பாஜக வென்றால் 50% கஷ்டம்.
*
இந்துத்துவர்களுக்கு மட்டும் யார் வென்றாலும் கஷ்டம்.
இந்துத்துவம் பக்கம் இந்துக்களும் பாஜகவும் வந்தாலொழிய காலப்போக்கில், மூவருக்கும் எது நடந்தாலும் கஷ்டமே.
*
இந்துத்துவம் என்றால் என்ன என்பது பற்றி அடிக்கடி விளக்கம் தந்தபடியே இருக்கவேண்டியிருக்கிறது.
இந்துத்தன்மையே இந்துத்துவம்.
சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அது வெளிப்படவேண்டும்.
வாழ்வின் அனைத்துச் செயல்களிலும் அது வெளிப்படவேண்டும்.
ஓர் இந்து தன்னை மற்ற அனைவருக்கும் சமமாக நடத்தும்படித்தான் கேட்கிறார். கூடுதல் சலுகை எதையும் கேட்கவில்லை.
அனைவரையும் நடுநிலையாக நடந்துகொள்ளும்படித்தான் கேட்கிறார். தனக்கு சாதகமாக நடக்கும்படிக் கேட்கவில்லை.
எம்மதமும் சம்மதம் என்கிறார். அதையே மற்ற மதத்தினரிடமும் எதிர்பார்க்கிறார்.
தன்னிடம் குறைகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். தன்னிடம் மட்டுமே குறைகள் இருக்கின்றனவா என்பதே அவருடைய கேள்வி.
பெரும்பான்மை என்பதை பேராதிக்கமாக அவர் ஒருநாளும் முன்வைத்ததில்லை. பெரும் தண்டனையாக ஆக்கப்படுவதைத்தான் கேள்வி கேட்கிறார்.
பாகிஸ்தானுக்குப் போ என்று ஈ.வெ.ரா. சொன்னதுபோல் சொல்லவில்லை. பாகிஸ்தானைப் பார்; அங்கு சிறுபான்மைகள் நடத்தப்படும்விதத்தைவிட 100 மடங்கு மேலாக இங்கு உரிமைகளும், சலுகைகளும், அதிகாரங்களும், அதிகார துஷ்பிரயோக உரிமைகளுக்கும் கிடைத்திருப்பதைப் பார் என்று சொல்கிறார்.
தேசத்தே நேசி… தர்மத்தைப் பின்பற்று… கலாசாரத்தைக் கைவிடாதே என்கிறார்.
இந்துத்துவர் ஆயுதத்தை எப்போது எடுக்கிறார்; எப்போது கீழே போடுகிறார்; எதனால் எடுக்கிறார் என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கச் சொல்கிறார்.
ஜிஹாதிகளின் வன்முறை, சிலுவைப் போர் கொடூரங்கள், கம்யூனிஸ பயங்கரவாதம், புலிகளின் வன்முறை ஆகியவற்றின் முன்னால் இந்துத்துவத் தாக்குதல்கள் எண்ணிக்கையிலும் எண்ணத்திலும் மிகவும் குறைவானது. அதிகம் அவதூறு செய்யப்படுவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் உள்ளதிலேயே அதிகம் அப்பாவி அதுவே என்பது.
ஒரு துளி ரத்தம் என்றாலும் கண்டிக்கத் தகுந்ததுதான். ஒரு துளி கூட ரத்தம் சிந்த வைக்காதவராலேயே கண்டிக்கப்படவேண்டும். காட்டுக்குள் சுள்ளி பொறுக்கும் பூர்வகுடியை மர ஆலை வியாபாரி கண்டிக்கக்கூடாது.
மத மாற்றம் என்பதை பூர்வ கலாசாரப் படுகொலை என்று இந்தியா உலக அரங்கில் அறிவிக்கவேண்டும்.
மத மாற்றம்/பூர்வ கலாசாரப் படுகொலை ஒரு பாவச் செயல்; மத மாற்றம்/பூர்வ கலாசாரப் படுகொலை தண்டனைக்குரிய குற்றம் என்று பள்ளி நூல்களில் பொன் எழுத்துகளில் அச்சிடவேண்டும்.
தர்ம சாஸ்திரங்களில் தலித் என்ற பெயரே/அடையாளமே கிடையாது. தலித் ஒடுக்குமுறை என்பது தலித் என்ற பெயர் முன்வைக்கப்பட்ட நவீன காலத்தில்தான் ஆரம்பித்தது.
நாலாம் வர்ணத்தினரில் பட்டியல் ஜாதியினரும் அடக்கம். அவர்களுக்கென்று தனி விதிமுறைகள், ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லை. நாலாம் வர்ணத்தினருக்கு இருந்த அதே சலுகைகள், கட்டுப்பாடுகள் பட்டியல் ஜாதிகள் என்று பிரிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.
இந்து தர்ம சமூகத் தொகுப்பில் பட்டியல் ஜாதி, பட்டியல் பழங்குடி, மலைவாசி, வனவாசி, நாடோடிகள், நரிக்குறவர்கள் என்ற நவீன காலப் பிரிவினைகள் எதுவுமே கிடையாது. அன்று இருந்த வாழ்வியல் நால் வர்ண தர்ம அடையாளம்; நாலாயிரம் ஜாதி குல அடையாளம்.
எல்லா ஜாதிகளில் இருக்கும் அர்ச்சகர்களும் புனிதச் சடங்குகள் செய்பவர்களும் வழிகாட்டிகளும் அந்தந்த ஜாதிகளின் பிராமண வர்ணத்தினரே.
பிராமண வர்ணத்திலும் கடைநிலை ஜாதிகள் உண்டு. நாலாம் வர்ண ஜாதிகளிலும் அவர்களுக்கான க்ஷத்ரியர், வைஸ்யர் உண்டு.
நவீன கால உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் மரபான காலத்துக்கு பொருத்திப் பார்ப்பது தவறு. அப்படியே பார்த்தால் உலகில் பிற எந்த சமூகமும் மதமும் நாடும் எவ்வளவு மோசமாக முன்பு இருந்ததோ அதைவிட பாரதம் அந்த விஷயங்கள் அனைத்திலும் மேலாகவே இருந்திருக்கிறது.
ஒரே நாட்டின் மரபான காலத்தையும் நவீன காலத்தையும் ஒப்பிடுவதைவிட ஒவ்வொரு நாட்டின் மரபான காலங்களை ஒப்பிடவேண்டும். ஒவ்வொரு நாட்டின் நவீன காலங்களை ஒப்பிடவேண்டும்.
உலகில் பிற மதங்களில் அடிமை முறை இருந்தபோது இந்து தர்மத்தில் வர்ணாஸ்ரமம் இருந்தது.
வர்ணாஸ்ரமம் ஒன்றாக இருந்தவர்களை நான்காகப் பிரிக்கவில்லை. நான்காக இருந்தவர்களை ஒன்றாகத் தொகுத்தது.
மனிதர்களை ஆயிரம் ஜாதிகளாகப் பிரிக்கவில்லை. ஆயிரம் ஜாதிகளாக இருந்த மனிதர்களை ஒரு நூலில் கோர்த்தது.
Dharmic Nation First. Offence is THE Best Defence.



