
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
மெட்ரோ ரயில் என்பது ஒரு வெள்ளை யானை கோடிகளை கொட்டினாலும் அதிலிருந்து வரும் வருவாய் மிக குறைவு. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களிலேயே மெட்ரோ ரயில் தடுமாறுகிறது.
துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் இன்னமும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா…? கொஞ்சம் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் அறிக்கையை இணையத்தில் எடுத்துப் பாருங்கள்…
21–22ல் நிகர நஷ்டம் 85.79 கோடி. 22–23ல் இது 34 கோடி. படிப்படியாக குறைந்து வருகிறதே தவிர இன்னமும் பிரேக் ஈவன் எனப்படும் லாபம்–நஷ்டம் இல்லா நிலையை அடையவில்லை. அனேகமாக 27–28 ல் பிரேக் ஈவன் வரலாம். அதன்பின் லாபத்தை பார்க்க வேண்டும்.
பெங்களூரிலும் மெட்ரோ நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த நிதியாண்டில் ஆயிரம் கோடி வருவாயை எட்டியும் 623 கோடி நஷ்டம். இது முந்தைய ஆண்டை விட கூடுதல் நஷ்டமாம்.
சென்னை, பெங்களுருக்கே இந்த நிலைய என்றால் மதுரை, கோவை எம்மாத்திரம். மதுரை மக்கள் எண்ணித்தான் செலவழிப்பார்கள். தேவையில்லா செலவுகள் மதுரையில் மிகவும் குறைவு. திருமங்கலத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு பஸ்சை விட கட்டணம் குறைவாக இருந்தால் தான் மெட்ரோவை ஏற்பார்கள்.
அதிலும் நகருக்குள் மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கே அமையும், அதற்கும் செல்லும் இடத்திற்கும் எவ்வளவு துாரம், ஆட்டோ பிடிக்க வேண்டுமா போன்ற விஷயங்களை பொருத்து தான் பயணிப்பார்கள். ஆரம்பத்தில் மெட்ரோ மீதான மோகத்தால் வேண்டுமானால் சென்று வருவார்கள். அதன்பின் வரவேற்பு குறைந்து விடும்.
சென்னையில் திருமயிலை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தடுமாற்றத்தில் தான் இருந்தது. தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டபின் ஓரளவு மக்கள் பயணிக்கின்றனர்.
முதல்வரும் தி.மு.க.,வினரும் மீண்டும் மீண்டும் சொல்வது, ‘ஆக்ராவில் மெட்ரோ ரயில் வந்து விட்டது… உ.பி.,யில் வந்து விட்டது’ என்பது. ஆக்ரா, உ.பி., சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம். அங்கு மெட்ரோ கண்டிப்பாக வரவேற்பை பெறும்.
மதுரையை அப்படியா வைத்திருக்கிறீர்கள். ஒருமுறை வந்து செல்லும் சுற்றுலா பயணி மீண்டும் வரவே மாட்டார்…. யாரும் மதுரைக்கு போகிறேன் என்றால் கூட போக விட மாட்டார். அவ்வளவு மோசமாக இருக்கிறது நிர்வாகம்.
வாகன நிறுத்துமிடம் துவங்கி சுற்றுலா பயணிகளை நம்மவர்கள் டீல் செய்யும் அழகு உலகப்பிரசித்தி.. அதை விட ரோடும், கோயிலும்… (அன்னை மீனாட்சி கோயிலும் அதை இவர்கள் நிர்வகிக்கும் அழகையும் பற்றி தனியாக எழுத உள்ளேன்)
என்னை பொறுத்தவரை மதுரைக்கு மெட்ரோ.. கிட்ரோவெல்லாம் தேவையே இல்லை. ரோடுகளை சரியாக அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோரிப்பாளையத்தில் கட்டியுள்ளது போன்று தேவையான இடங்களில் பாலங்கள் அமைத்தாலே போதும். கோடிகளை கொட்டி மெட்ரோவை கொண்டு வந்து பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றால் என்னாகும்.
பயணிகளிடம் வரவேற்பு இருக்குமா, நிலம் கையகப்படுத்த எவ்வளவு செலவு வரும் போன்ற மத்திய அரசு கேட்கும் விபரங்களை தர வேண்டியது மாநில அரசின் கடமை. அதை விடுத்து அதில் அரசியல் செய்வது பொறுப்பின்மையின் உச்சம்.
- எஸ்.சந்திரசேகர், மதுரை




