
புதுதில்லி:
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவுகள் இன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்க் பிரச்னை காரணமாக இன்று வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை மதிப்பெண் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மதிப்பெண் வழங்கவும் நேற்று உத்தரவிட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ இன்று ஆலோசனை நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ இயக்குனர் சதுர்வேதி, பிற்பகலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரை சந்தித்து பேச உள்ளார். இதனால் எதிர்பார்த்தபடி இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது என்றும், அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.



