கோயில் என்பது இறைவனின் வீடு போன்றது. சிவபெருமான் பார்வதி தேவி குடியிருக்கும் அவர்களின் மாளிகை பெருமாளும் தாயாரும் குடியிருந்து கோலோச்சும் ராஜ மாளிகை. இறைவனையும் நம்மைப் போல் பாவிப்பது ஒரு விதம்.
நாம் இரவு பால் குடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றால் பின்னர் நள்ளிரவில் யாராவதுகதவைத் தட்டி எழுப்பினால் எப்படி இருக்கும்? தம்பதியாய் படுத்துறங்கும் அறையை எவரேனும் இரவு தட்டினால் எப்படியிருக்கும்?
ஆனால் நாம் மட்டும் இறைவனின் வீட்டுக் கதவை ராத்திரி தட்டி, அங்கே சென்று மணி அடித்து கும்மாளம் போடுகிறோமே!
நம் தூக்கத்தைக் கெடுத்து நம்மை எழுப்பினாலே மற்றவருக்கு பாவம் வந்து சேருமே! நாம் போய் இறைவனின் கோயிலைத் தட்டி அவர்களின் நிம்மதியைக் கெடுத்தால் எப்பேர்ப்பட்ட பாவங்கள் வந்து சேரும்..! நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு நடுங்குகிறதே!
அர்த்தஜாம பூஜை நிறைவடைந்ததும், சயன பேரர் எனப்படும் சயனப் பெருமானுக்கு பால் நிவேதனம் செய்து படுக்கைக்கு எழுந்தருளச் செய்துவிடுவர். அதன் பின்னர் கதவைத் தட்டி இரவு நேரத்தில் போய் அவர்களை தரிசிப்பது மகா பாவம்.
இந்தப் பாவத்தை ஆன்மிக அன்பர்கள் செய்ய வேண்டாம். நம் பகவானின் அருள் நமக்கு சூரிய உதயத்தின் பின்னேதான் கிடைக்கும்! முறையாக ஆகம விதிப்படி, கோபூஜை செய்து, திருப்பள்ளி எழுச்சி பாடி, விளக்கு ஏற்றி பாதத்தில் / லிங்க பீடத்தில் நீர் விட்டு எழுந்தருளச் செய்த பிறகே நாம் பெருமானை சேவிக்க வேண்டும்.
கவனத்தில் கொண்டு, நள்ளிரவு தரிசனத்தை தவிர்ப்போம். கொடும் பாவத்தில் இருந்து தப்புவோம்!