“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்பதிலே….” என்று ஒரு சினிமா பாடல் உள்ளது. ஒரு மனிதன் நல்லவனாவது அவன் வளரும் சூழ்நிலையிலேயே உள்ளது என்பதை விளக்கும் பாடல் அது.
இது உண்மை தானா என்று கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் சோதனை நடத்தினார்கள். சூழ்நிலை தான் மனிதனை உருவாக்கிறது. உயிரியல் விஞ்ஞானம் புது உயிர்களை மட்டும் உருவாக்க முடியுமே தவிர, பிறந்த உயிருக்கு வலுவான நல்ல பண்புகளை போதிக்க முடியாது.
ஒரே பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இடையே பல்வேறு மாறுபட்ட பண்புகளையும் குணங்களையும் நாம் காண்கிறோம். அதிலும் குறிப்பாக தாயின் ஒரே கரு முட்டை இரண்டாக பிளவுட்டு வளர்ந்து வரும் இரட்டை குழந்தைகள் கூட தோற்றத்தில் ஒரே மாதிரி அச்சாக ஒத்து இருந்தாலும், அவர்களின் பண்புகளும், பழக்க வழக்கங்களும் மாறுபடக்காரணம் என்ன என்று ஆராய்ந்தால், அது சூழ்நிலைதான் என்பதை தயங்காமல் சொல்லலாம்.
சாண்டாக், நெல்சன் என்ற இரண்டு உளவியல் அறிஞர்கள் 1993-ம் ஆண்டு ஒரே தோற்றத்துடன், ஒரே பிரவசத்தில் பிறந்த மூன்று குழந்தைகளை தங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஹென்றி, ஜான், பிரட் என்று பெயரிட்டார்கள். மூவரையும் மாறுபட்ட சூழ்நிலையில் வளர்த்தார்கள்.
பின்னாளில் அவர்கள் பெரியவர்களானதும், முதல் குழந்தை ஹென்றி, மிகுந்த சுயநலமிக்கவனாகவும், இரண்டாவது குழந்தை ஜான், பெற்றோர்களை போற்றி பாதுகாப்பவனாகவும், மூன்றாவது குழந்தை பிரட், சமூக நல மனப்பான்மை கொண்ட தொண்டனாகவும் வளர்த்திருந்தார்கள்.
மூவரும், மூன்று விதமாக வளர்ந்ததற்கு, அவர்கள் வளர்ந்த சூழ்நிலை தான் காரணம். அமெரிக்காவின் நியுயார்க்கில் பிறந்த, அமெரிக்க பாரம்பரியம்மிக்க ஒரு குழந்தையை, 6-வது மாதத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள ஒரு வீட்டில் வளர்ந்தால், அந்த குழந்தை தனது 5-வது வயதில் ‘எங்க தல எங்க தல டி.ஆரு சண்டே மண்டே ..’ என்று அப்போதைய குத்துப் பாட்டுதான் பாடுமே ஒழிய, ஆங்கில பாடலை பாடாது.
ஒரு குழந்தை எங்கு வளர்கிறதோ, அந்த குணத்தையே அது பெறுகிறது. தீவிரவாதிகள் உருவாவதற்கு காரணம், அவர்கள் வளரும் சூழ்நிலை தான் என்றார்கள், உளவியல் விஞ்ஞானிகள். சரியான உளவியல் சிகிச்சை கொடுத்தால், இவர்களையும் சாதாரண மனிதர்களைப்போல, மனித தன்மை கொண்டவர்களாக மாற்ற முடியும் என்றும் கூறுகிறார்கள்.
அதனால் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதற்கு வளரும் சூழ்நிலைதான் காரணமே தவிர பிறப்பு அல்ல. பிறப்பால் ஒருவன் பெரிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வளர்ப்பு சரியாக இல்லையென்றால் நல்லவனாக உருவாக மாட்டான் என்பதுதான் உண்மை.




