சாய்னா நேவால் மீண்டும் முதல் இடம்: தக்க வைப்பது கடினம் என்கிறார்

Published:

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியன் ஓபன் கிராண்ட்ஃபிரி பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். இதை அடுத்து ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். ஆனால் மறுவாரமே மலேசிய ஓபன் போட்டியில் வெளியேறியதால், 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நேற்று புதிதாக வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சாய்னா நேவால் 80,191 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியை முதலிடத்தில் இருந்த சூய்ருய் (72,964 புள்ளி) புறக்கணித்ததால் இரண்டு இடங்கள் இழந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் சாய்னா முதலிடத்தை எட்டினார். இதுகுறித்து சாய்னா நேவால் கூறியபோது…. முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஆனால் பேட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தை எட்டிய முதல் இந்தியப் பெண் நான்தான் என்ற வகையில் அதற்கே மக்கள் மதிப்பளிக்க வேண்டும். போட்டிகளில் எல்லாம் சரியாக அமைந்து, பயிற்சியும் நல்ல விதமாக இருந்தால், நீண்ட காலம் முதலிடத்தில் என்னால் தொடர முடியும். ஆனால் இது லேசான விஷயமில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாளும் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ப உழைப்பேன். என் நாட்டுக்காக மேலும் பல பட்டங்களை வெல்ல முயற்சி செய்வேன். எனது முதலிட அந்தஸ்துக்கு நிறைய வீராங்கனைகள் அச்சுறுத்தலாக உள்ளனர். சீன வீராங்கனை லீ சூய்ருய் பிரதான போட்டியாளர். மற்றவர்களை காட்டிலும் இவர் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார். எனவே அவர் மீண்டும் முதலிடத்தை தட்டிப் பறிக்க வாய்ப்புள்ளது… என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Related articles

Recent articles

spot_img