மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற, 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த உல்ஹாஸ்நகர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இறந்ததற்கு பின் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அப்பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றுள்ளனர்.
மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறுதி சடங்கு செய்வதற்காக இறந்த பெண்ணில் உடலை பையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து இறுதிசடங்கில் பங்கேற்ற நெருங்கிய உறவினர்கள் உட்பட 70 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இம்மாத துவக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதான நோயாளி ஒருவர் மரணமடைந்தார். உடலை திறந்து இறுதிச்சடங்கு செய்ததால் 20 பேருக்கு தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.