புதுதில்லி: ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 2–ந்தேதி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க மட்டுமே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏர்செல்– மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல. எனவே சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை. இதனால் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, வி.கோபால கவுடா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்தனர். ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையும் திருப்திகரமாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர். சம்மன் அனுப்பியதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

