பாட்னா:
பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. விரோதிகளாக இருந்த இரு தரப்பும் பொது எதிரியான பா.ஜ.க.,வை வீழ்த்த பீகார் சட்டசபை தேர்தலில் ஒன்று சேர்ந்து கை கோத்துள்ளன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 100 தொகுதிகளில் போட்டி போடுகின்றன.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வருகிற 8ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் இரு கட்சிகளின் கூட்டணி அரசே அமையும் என்றும் கூட்டணி அமைச்சரவையே அமையும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி தோல்வியைத் தழுவினால் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைய முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெகா கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் மீண்டும் முதல்வராவார். அவர் ஆட்சிக்கு லாலுபிரசாத் கட்சியால் பின்னாளில் பிரச்னைகள் வந்து விடக்கூடாது என்று கருதும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் ராஷ்ட்டீரிய ஜனதா தளத்தை தங்கள் கட்சி உடன் இணைத்துக் கொள்ளும் யோசனையை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2 மாதமாக இரு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்ததால் அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இரு கட்சிகளும் இணைவதில் பெரிய அளவில் தடை எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் இதுதொடர்பாக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம் என்று ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கட்சிகளை இணைப்பது குறித்து சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும், ராஷ்டீரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஒருவரும் சந்தித்து பேசினார்கள். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர்கள் சிலரும் இந்த இணைப்பை விரும்புவதால் லாலுபிரசாத் யாதவும் சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
67 வயதாகும் லாலுபிரசாத் யாதவ் குற்றவழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் மீண்டும் முதல்வராக இயலாத நிலை உள்ளது. எனவே அவர் தில்லி அரசியலில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இணையும் பட்சத்தில் தில்லியில் தனக்கு வலுவான நிலை கிடைக்கும் என்று லாலு நம்புகிறார். மேலும் பீகாரில் தன் மகன்கள் அரசியலுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க முடியும் என்று நினைக்கிறார். எனவே, ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் இன்னும் சில மாதங்களில் இணைந்து ஒரே கட்சியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.



