விங் கமாண்டர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி. அவர் இன்று மக்களவையில் பேசும்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
பாரதத்தைச் சேர்ந்த விங் கமெண்டர் அபிநந்தன், கடந்த மே 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தைத் துரத்தி அடித்தார். அப்போது அவர் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளாக, பாகிஸ்தான் எல்லையில் தவறுதலாக பாராசூட்டில் இறங்கினார். இதனால் பாகிஸ்தான் ராணுவம் அவரைப் பிடித்துச் சென்றது. அந்நிலையில், பாகிஸ்தான் ராணூவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் தைரியமாகவும் பதிலளித்தார். அவர் பதிலளித்த வீடியோவை பாகிஸ்தான் அதிகாரிகளே வெளியில் உலவ விட்டனர்.
ஆனால் அதன் மூலம் விமானி அபிநந்தன் இந்தியர்களிடம் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் எல்லாம் ஆச்சரியப் படுத்தும் மனிதர் ஆகிவிட்டார். இந்தச் சம்பவம் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து, இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து மற்ற உலக நாடுகள் தங்கள் அழுத்தத்தை வெளிப்படுத்த, அபிநந்தனை அடுத்த நாளே விடுவித்தது பாகிஸ்தான்.
அப்போது, அபிநந்தனின் வீர மிகுந்த சொற்கள் மக்களை மயக்கியது போல், அவர் வைத்திருந்த கம்பீரமான மீசையும் பலருக்கும் பிடித்துப் போனது. சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் அதனை ஒரு அடையாளச் சின்னமாகவே மனத்தில் பதித்துக் கொண்டனர். அந்த மீசையின் வடிவத்தைக் கண்ட இளைஞர்கள் அதே ஸ்டைலில் கம்பீரமான வகையில் மீசை வைத்தனர்.
இதனிடையே இன்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி மக்களவையில் பேசியபோது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு விருது வழங்கப்பட வேண்டும், அவரது மீசையை ‘தேசிய மீசையாக’ அறிவிக்க வேண்டும்” என்று வேண்டுகோளை முன்வைத்தார்.
அண்மையில் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக., அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தும், கோட்டை விட்டது. அதற்குக் காரணமாக, காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுலின் பாகிஸ்தான் ஆதரவுப் பேச்சும், ராணுவத்துக்கு எதிரான பேச்சும் என்று கூறப் பட்டது.
மேலும், அபிநந்தன் குறித்து தேர்தலில் பாஜக., எதையும் பேசக் கூடாது என்றும், அது பாஜக.,வுக்கு ஆதரவானதாக மாறக் கூடும் என்று தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியது. காங்கிரஸின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையமும், பாஜக.,வோ மோடியோ அபிந்தந்தன் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தேர்தல் பிரசாரங்களில் பேசக் கூடாது என்றது.
இந்நிலையில் காங்கிரஸின் போக்கில் ஒரு மாற்றமாக, அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்நிறுத்தப் பட்டிருக்கிறது.