ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராமசேதுவை நினைத்து பெருமை கொள்வோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வு செய்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
கீழடி ஆய்வு குறித்த தகவல் வெளிவரும் முன்பே, அது குறித்த தங்களது விஷமத்தனமான கருத்துகளைத் தெரிவித்தனர் பலர். இந்நிலையில், நாட்டின் மிகப் பழைமையான இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்டு, தமிழ் மண்ணில் இருக்கும் வரலாற்றுப் பூர்வ இடங்கள், சின்னங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள கருத்து…
பெருமை கொள்வோம் – ராம சேது: பழம்பெரும் இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா – இலங்கை இடையேயான கடற்பாலம் உண்மையானதா? அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆம் என்கின்றன.
செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்திலிருந்து இந்தியா-இலங்கை இடையே இந்தியப் பெருங்கடலில் தொடர் சங்கிலி போல் தோற்றமளிக்கும் சில படிமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது என்று அறிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஒரு ஆராய்ச்சியாளர், “இதைத்தான் மந்திர பாலம் என இந்து புராணப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் ராமரைக் குறிப்பிட்டுள்ளனர்”எனக் கூறுகிறார் செல்ஸீ ரோஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.
“அந்த மணல் திட்டின் மேல்பரப்பில் இருக்கும் பாறைகள் மணல் திட்டை விட முந்தைய காலத்தில் உருவாகியிருக்கிறது. மணல்திட்டு வெறும் 4000 ஆண்டுகளுக்கு முந்தையதே அந்தப் பாறைகள் 7000 ஆண்டுகளுக்கு முந்தையது” எனப் பேசுகிறார்.
ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராம சேதுவை நினைத்து பெருமை கொள்வோம்… – என்று குறிப்பிட்டுள்ளார் ஹெச்.ராஜா.