
சென்னை:
கடலை மிட்டாய்க்குக் கூட ஜிஎஸ்டி வரி என்று பரவிய அதிருப்தி அலைக்கு விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த விளக்கக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.20 லட்சத்துக்கு மேலான வர்த்தகக் கணக்குக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார். அவர் பேசியதிலிருந்து…
சிறுதொழில், குறுதொழில் அல்லது ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருந்து கொண்டு வியாபாரம் செய்யுங்கள். அப்போது கடலை மிட்டாய்க்கும் வரி கிடையாது.
நீங்கள் பர்கர் கூட செய்யுங்கள். ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் உங்களுக்கு வரி இல்லை. ஆனால் பர்கருக்கும் வரி, கடலை மிட்டாய்க்குமா வரி என்று எளக்காரமாக சொல்லக் கூடாது.
ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் பஞ்சு மிட்டாய்க்கும் வரி இல்லை. கடலை மிட்டாய்க்கும் வரி இல்லை. ஆனால் அதே கடலை மிட்டாயை சர்வதேச அளவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் போது பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்யும் போது அதன் வியாபாரம் ரூ.20 லட்சத்துக்கு மேல் சென்றால் நீங்கள் வரிகட்டியாக வேண்டும்.
எனவே அதில் எந்த பொருள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. பொருளின் மதிப்புக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படவில்லை. விற்பனைக்கு ஏற்பதான் வரி போடப்படுகிறது. ஆனால் உணவுப் பொருள்களின் மீது மட்டும் இந்த மாதிரி விதிக்கப்படவில்லை.
ஓட்டல்களில் இப்போது வரைக்கும் இட்லிக்கோ, தோசைக்கோ வரியே இல்லாமல் இருந்ததா? புதிதாக நாங்கள் வரி போடவில்லையே உள்ளூரில் போட்டோ, விற்பனை வரியோ உற்பத்தி வரியோ போட்டதினால் அதற்கு ஒரு வரி இருந்ததால் அந்த வரிக்கு சமமான முறையில் இப்போது ஜி.எஸ்.டி.யில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பழைய வரிக்கு பொருத்தமான வகையில் தான் புதிய வரியை சம விகிதத்தில் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இட்லி சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களா? போடு… வரியை என்ற ரீதியில் நாங்கள் வரி போடவில்லை. இதில் உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு வழி இல்லை.
ஒவ்வொரு மாநிலமும் நிதி மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் உறுப்பினராக இடம் பெறச் செய்து இருந்தது. அப்போது கொடுக்கல் வாங்கல் போல் அனைவரும் ஒப்புக் கொண்டனர். இதில் ஒரு மாநிலத்தில் ஒருவேளை பொருட்கள் விலை ஏற்றம் அல்லது விலை குறைவு ஏற்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிக்க அந்த மாநில நிதிமந்திரிதான் பொறுப்பு.
கம்யூனிஸ்டுகள் இன்று எதிர்க்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த நிதி மந்திரி கலந்து கொண்டாரே, அவர் ஒருமுறையாவது எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தாரா? இது ஒருமனதாக அனைவரும் சேர்ந்து சரி சமமாக எடுத்த முடிவு. நாம் எப்படி தெரியுமா? ஐயோ என் காதில் ஒரு தகவல் வந்து விட்டது, அது நிஜமா… பொய்யா… என தீர விசாரிக்காமல், ஐயோ… ஆமாம்… இந்த அரசு மோசம், இவர்கள் இப்படித்தான் பண்ணுவார்கள், ஏழைகளை வாட்டுவார்கள் என்ற எண்ணத்தோடு சொல்ல வேண்டுமானால் சொல்லலாம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


